கருணாநிதி பிறந்தநாள்-6,000 மின் ஊழியர்களுக்கு யோகம்
சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மின் வாரியத்தில் வேலை பார்த்து வரும் சுமார் 6 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப்படும் என தெரிகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொழிற் சங்கங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
இந் நிலையில் கடந்த 2007ல் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் பயனாக மின்வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் மஸ்தூர் பணியாளர்கள் 2,500 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 6,000 பேர் என மொத்தம் 8,500 பேருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என கூறப்பட்டது.
மேலும் புதிதாக தலா 6 ஆயிரம் தற்காலிக பணியாளர்களும், ஒப்பந்த பணியார்களும் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் அவர்களுக்கு பணி உயர்வு அளிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது 6000 தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6000 தற்காலிக பணியாளர்கள் மஸ்தூராக பணி நிரந்தரம் பெற இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பை மின்வாரியம் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அன்று வெளியிடும் என தெரிகிறது.
இது தவிர்த்து மின்வாரியத்தில் காலியாக இருக்கும் 1,500 பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்கும் உத்தரவும் வெளியாகலாம். தொகுப்பு ஊதியமாக ரூ. 2,500 பெற்று வரும் 4 ஆயிரம் ஹெல்பர்களுக்கு அடுத்த 2 இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரமாகும் எனவும் கூறப்படுகிறது.