தெற்கு-கிழக்கில் 300 மனித வெடிகுண்டுகள் ஊடுறுவல்: பொன்சேகா
விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் கூறி வரும் போதிலும், சரத் பொன்சேகாவுக்கு இன்னும் புலிகள் குறித்த சந்தேகம் இருக்கிறது. இதைத்தான் அவரது சமீபத்திய பேட்டிகள் வலியுறுத்தி வருகின்றன.
விடுதலைப் புலிகள் இன்னும் செயல்பாட்டில்தான் உள்ளனர். ஆனால் தற்காலிகமாக அவர்கள் உறங்கு நிலையில் உள்ளனர். கொரில்லாத் தாக்குதலில் அவர்கள் ஈடுபடலாம் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருப்பதாக தற்போது அவர் தெரிவித்துள்ளார். மேலும், தெற்கு, கிழக்கு மாகாணங்களில் 300 தற்கொலைப் படை வீரர்கள் ஊடுறுவியிரு்பபதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இலங்கை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விடு தலைப்புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இதற்காக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் 300 தற்கொலைப் படையினர் இலங்கையின் பல பகுதிகளில் ஊடுருவி இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. எனவே ராணு வத்தை உஷார்படுத்தி உள்ளோம்.
வடக்கு பகுதியில் கூடுதல் ராணுவ படையை நிரந்தரமாக வைக்க இயலாது. மற்ற பகுதி அச்சுறுத்தல்களை ராணுவம் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. எனவே வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவம் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
வடக்கில் உள்ள தமிழ் இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். வடக்குப் பகுதி தமிழ் இளைஞர்களுக்கு அப்பகுதிகள் மிகவும் நன்றாகப் பரிச்சயமானவை என்பதால் அவர்களை பணியில் அமர்த்துவது இலகுவாக இருக்கும்.
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் அந்தப் பிரதே பாதுகாப்புப் பணியில் 800 தமிழ் இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சகல இனத்தவரும் இணைந்து இலங்கை ராணுவத்தில் சேர்ந்தும், ராணுவத்துடன் இணைந்தும், தாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றார் பொன்சேகா.