எல்டிடிஇ பெண்கள் பிரிவு தளபதி தமிழினி அகதிகள் முகாமில் கைது
அவரை தற்போது தனி முகாமுக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனராம்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண்கள் பிரிவு தளபதியாக இருந்து வந்தவர் தமிழினி. வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் தனது தாயார் சுப்பிரமணியம் கவுரி விஜயராஜா, சகோதரி மகேஸ்வரி ஆகியோருடன் தங்கி இருந்தார். அப்போது, தமிழினியை ராணுவத்தினர் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தை எட்டியதும், புதுமாத்தளன் பகுதியில் இருந்து ஏராளமான தமிழர்கள் உயிர் தப்புவதற்காக ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு அகதிகளாக வந்தனர். அப்போது தமிழினியும் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளார்.
தான் யார் என்பது தெரிந்து விடாமல் இருப்பதற்காக கழுத்தியில் கட்டியிருக்கும் சயனைடு விஷ குப்பி, கைத்துப்பாக்கி ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு மக்களோடு மக்களாக கலந்து ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து விட்டார்.
ராணுவத்தினர் முகாமில் விசாரணை மேற்கொண்டபோது தமிழினி யார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தனி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரந்தன் இந்து கல்லூரியிலும், கிளிநொச்சியில் உள்ள சென்டிரல் கல்லூரியிலும் படித்தவர் தமிழினி. இவரது இயற்பெயர் சிவதாய். புலிகள் இயக்கத்தில் 1991ம் ஆண்டு சேர்ந்த பின்னர் அவருக்கு தமிழினி என பெயர் சூட்டப்பட்டது.
நீர்வேலி என்ற இடத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் போர் பயிற்சி பெற்ற தமிழினிக்கு, முதலில் ஒரு கயிறு தொழிற்சாலையை கவனிக்கும் பொறுப்பும், அதன்பிறகு கிலாலியில் உள்ள பண்ணையை கவனிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திலும் பணியாற்றி உள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண்கள் பிரிவு தளபதியாக இருந்த நெஸ்மியா என்பவர் முகமலை என்ற இடத்தில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் பலியானதை தொடர்ந்து, அந்த பதவிக்கு தமிழினி நியமிக்கப்பட்டார்.
தமிழினியின் மற்றொரு சகோதரியான சாந்திலன் கடந்த 1998-ம் ஆண்டு பரந்தன் என்ற இடத்தில் ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.