தமிழக சட்டசபை ஜூன் 17ம் தேதி கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூன் மாதம் 17ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்த அறிவிப்பை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா வெளியிட்டுள்ளார்.
சட்டசபையின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 17ம் தேதி தொடங்கியது. அன்று பட்ஜெட் தாக்கலானது.
வழக்கமாக ஒன்றரை மாத காலம் வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும். ஆனால் இடையில் லோக்சபா தேர்தல் குறுக்கிட்டதால் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு வாரம் மட்டுமே நடந்தது. பிப்ரவரி 26ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளுக்காக சட்டசபை வருகிற 17ம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில் 51 மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதமும், பதிலுரைகளும் இடம் பெறும். இக்கூட்டம் ஒரு மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாமக, மதிமுக, இடதுதாரிக் கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகியுள்ள நிலையில் கூட்டம் கூடுவதால் பரபரப்புக்கு பஞ்சமி்ருக்காது.
முதல்வர், நிதியமைச்சருக்கு அடுத்த நிலையில் ஸ்டாலின் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சட்டசபையிலும் அவரது இருக்கை இடம் மாறுகிறது.
தற்போது முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோருக்கு தனி இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மூன்றாவது இடத்தில் வழக்கமாக ஆற்காடு வீராசாமி அமர்ந்திருப்பார். அவருக்கு அடுத்த இடம் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இப்போது வீராசாமியின் இருக்கையில் ஸ்டாலின் அமருவார் எனத் தெரிகிறது. அவருக்கு அடுத்த இடத்தில் ஆற்காடு வீராசாமி அமரக் கூடும்.