காங்கிரஸை நம்பி திமுக-இல.கணேசன் பரிதாபம்
பழனி: ஒரு மகன், பேரனை மத்தியிலும், இன்னொரு மகனை மாநிலத்திலும் வைத்து ஆட்சி நடத்தப் பார்க்கிறார் கருணாநிதி என்று பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறினார்.
பழனியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
திமுக செயற்குழு கூட்டப்பட்டு தான் கட்சியின் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படும் எனக் கூறிவிட்டு இப்போது காங்கிரஸ் கட்சியின் பாணியில் முதல்வர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கியுள்ளார்.
ஒரு மகன், பேரனை மத்தியிலும், இன்னொரு மகனை மாநிலத்திலும் வைத்து ஆட்சி நடத்தப் பார்க்கிறார் கருணாநிதி.
இலங்கையில் தமிழர்கள் நிவாரண முகாமில் போதிய மருத்துவ வசதி, குடிநீர் வசதி, உணவு, இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் பலர் விடுதலைப்புலிகளா என விசாரிக்க அழைத்து செல்லப்பட்டு காணாமல் போகின்றனர்.
கருணாநிதி தமிழக தமிழர்களுக்கு மட்டுமே குரல் கொடுக்கும் நிலையில் உள்ளார். முன்பு திமுகவை நம்பி காங்கிரஸ் இருந்தது. இப்போது காங்கிரஸை நம்பி திமுக உள்ளது. இதனால் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு அவர் குரல் கொடுக்க முடியாது.
பாஜக தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து விரைவில் சென்னையில் கூடி விவாதிப்போம் என்றார்.