சாலையில் கிடந்த நல வாரிய விண்ணப்பங்கள்!
நாமக்கல்: நாமக்கல் அருகே சாலையில் சிதறிக் கிடந்த நலவாரிய விண்ணப்பங்களால் பொது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்-சேலம் சாலையில் காகித மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது.
லாரி உரிமையாளர் சங்கம் அருகே செல்லும் போது லாரியில் இருந்த மூட்டைகளில் இருந்து ஏராளமான காகிதங்கள் கொத்து கொத்தாக கீழே சிதறி விழுந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் லாரியை நிறுத்தக் கோரி கூச்சல் போட்டனர். ஆனால் லாரி நிற்காமல் சென்று விட்டது.
இதனால் லாரியில் இருந்து கீழே விழுந்த காகிதங்களை பொது மக்கள் சேகரித்த பார்த்த போது அவைகள் நலவாரியத்துக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்கள் என்பது தெரிய வந்தது.
பெரும்பாலான விண்ணப்பங்கள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. உடல் உழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்திருந்த தொழிலாளர்களின் புகைப்படம் மற்றும் அனைத்து விவரங்களும் இதில் இடம் பெற்றிருந்தன.
இந்த விண்ணப்பங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்த பிறகு கழிவுக்காக கொண்டு செல்லப்பட்டவையா அல்லது நலவாரிய ஆவணக் காப்பகத்துக்காக கொண்டு செல்லப்பட்டவையா என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
அரசிடம் வழங்கிய விண்ணப்பங்கள் கேட்பாரற்று சாலையில் சிதறி கிடந்தது பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.