ஆஸி இனவெறியர்களால் எனது மகன் பலி - ஹர்பஜன் உறவினர்
ஜலந்தர்: இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் உறவினர் மகன், ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங்கின் உறவினரான ஜகத்சிங் கூறுகையில், எனது 26 வயது மகன் உப்கார் சிங் பப்பால், 2004ம் ஆண்டு ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றான். அங்கு அதே ஆண்டு மே 7ம் தேதி இனவெறியர்களால் தாக்ப்பட்டு கொல்லப்பட்டான்.
ஆஸ்திரேலிய டாக்சி டிரைவர் ஒருவர், எனது மகனை அடித்துக் கொன்று, மெல்போர்ன் ரயில்வே டிராக்கில் எனது மகனின் உடலைப் போட்டதாக அங்குள்ள எனது நண்பர்கள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை இனவெறியர்கள் துன்புறுத்துவது குறித்து எனது மகன் பலமுறை கூறியுள்ளான். இப்போது அது வெளியுலகுக்கு பெரிய அளவில் அம்பலமாகியுள்ளது.
தற்போதைய இனவெறித் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும்போது, எனது மகன் கொல்லப்பட்டது குறித்தும் இந்திய அரசு விசாரிக்க வேண்டும்.
எனது மகனின் உடலைப் பிரேதப் பரிசோதனை கூட செய்ய ஆஸ்திரேலிய போலீஸார் மறுத்து விட்டனர். இதனால் அங்கிருந்த எனது நண்பர்கள்தான் எனது மகனின் உடலை இங்கு அனுப்பி வைத்தனர்.
இனவெறியர்களால் கொல்லப்பட்ட போதிலும், எனது மகன் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக ஆஸ்திரேலிய போலீஸார் தெரிவித்தனர் என்று கூறியுள்ளார் சிங்.