பர்னாலா ஓய்வு பெறுகிறார்-அடுத்த தமிழக ஆளுநர் யார்?
டெல்லி: தமிழக ஆளுநர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர்களான அர்ஜூன் சிங், சிவராஜ் பாட்டீல், சைபுதீன்சோஸ், சிஸ்ராம் ஓலா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
தற்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. சமீபத்தில் அவருக்கு இருதய அறுவை சிகி்ச்சையும் நடந்தது. உடல் நிலை குன்றியுள்ள அவருக்கு மீண்டும் ஆளுநர் பதவி தரப்பட மாட்டாது என்று தெரிகிறது.
முதல்வர் கருணாநிதியால் விரும்பி ஆளுநர் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் பர்னாலா. 1990ம் ஆண்டு அப்போதைய சந்திர சேகர் அரசு ராஜிவ் காந்தி-ஜெயலலிதாவின் நிர்பந்தத்தால் விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி திமுக அரசைக் கலைக்க ஆளுநரிடம் அறிக்கை கேட்டது. ஆனால், அதைத் தர மறுத்த பர்னாலா தனது பதவியையே ராஜினாமா செய்துவிட்டுச் சென்றார்.
இதையடுத்து வேறு ஆளுநரை நியமித்து ஆட்சியைக் கலைத்தது சந்திர சேகர்-ராஜிவ்-ஜெயலலிதா-ஜனாதிபதியாக இருந்த ஆர்.வெங்கட்ராமன் டீம்.
இதனால் முதல்வர் கருணாநிதியின் அன்புக்குப் பாத்திரமானார் பர்னாலா. மத்தியில் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் பர்னாலாவையே மீண்டும் ஆளுநராக்க வைத்தார்.
இந் நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது பதவிக் காலம் இம் மாதத்துடன் நிறைவடைகிறது. அவருக்கு மேலும் பதவி நீடிப்பு கிடைக்காது என்று தெரிகிறது.
இதையடுத்து அடுத்த ஆளுநர் நியமனத்துக்கான பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது.
மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் இம்முறை மூத்த தலைவர்களான அர்ஜூன் சிங், சிவராஜ் பாட்டீல், சைபுதீன்சோஸ் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவியை தரவில்லை.
இவர்களுக்கு ஆளுநர் பதவிகளைத் தர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் சிவராஜ் பாட்டீல் தமிழக ஆளுநர் ஆக விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவரான இவரை ஆளுநராக்குவதை திமுக விரும்பவில்லை என்று தெரிகிறது.
அர்ஜூன் சிங்குக்கு திமுக தரப்பி்ன் முழு ஆதரவு இருப்பதாகவும், அதே நேரத்தில் சைபுதீன் சோஸை தமிழக ஆளுநராக்க காங்கிரஸ் விரும்புவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு தவிர மத்தியப் பிரதேசம், திரிபுரா, கேரளா ஆகிய மாநில கவர்னர்களும் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்கள். மேலும் உத்திரபிரதேசம், மராட்டியம், கோவா, அரியானா, குஜராத் ஆகிய மாநில ஆளுநர்களின் பதவிக் காலமும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.
புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் கோபிந்த்சிங் குச்சார் சமீபத்தில் காலமானார். இதையும் சேர்த்தால் 10 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட வேண்டியதுயுள்ளது.
கவர்னர்களைத் தேர்வு செய்யும் பணியை காங்கிரஸ் தலைமை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு புதிய ஆளுநர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது
முதலில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆளுநர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.