தமிழகத்தில் 77 எஸ்.ஐகளுக்கு பதவி உயர்வு
நெல்லை: தமிழகத்தில் பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் முடிந்த 77 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1997ம் ஆண்டு 250 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்ந்தனர். பி்ன்னர் அவர்கள் பல்வேறு இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டனர். தற்போது பணியில் சேர்ந்து சுமார் 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் அவர்களில் 56 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
மேலும் பணி காலத்தில் தண்டனை பெற்ற 10 பேருக்கு பதவி நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள 184 பேருக்கு கடந்த பிப்ரவரி 13ம் தேதி இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கும் நோக்கில் பட்டியல் தயாரிக்கப்பட்டு டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் முதல் கட்டமாக 77 சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நேற்று முன்தினம் பிறபிக்கப்பட்டது.
இதில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நெல்லை மாநகரத்தில டவுண் போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகிய இருவர் மட்டும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, துணை கமிஷனர் ஜெயசந்திரன் ஆகியோர் இன்ஸ்பெக்டர் குருநாதனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.