து.முதல்வர் ஸ்டாலினுக்கு 2 ஐஏஎஸ் செயலாளர்கள்
சென்னை: துணை முதல்வராக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு செயலாளர் மற்றும் துணைச் செயலாளராக இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக முதல்வருக்கு மட்டுமே ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டு அவருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு உதவியாக இரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் கே.தீனபந்து செயலாளராகவும், விருதுநகர் மாவட்டக் கலெக்டராக உள்ள கே.ரகுபதி, துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இரு மாவட்ட கலெக்டர்களும் மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீபதி அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராகவும், சிவகங்கையின் கலெக்டராக சிகி தோமஸ் வைத்தியனும் நியமிக்கப்பட்டு்ள்ளனர்.
எஸ்.வி.சேகர்-முரளி வாழ்த்து:
இந நிலையில் அதிமுக எம்எல்ஏவான எஸ்.வி.சேகர், ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து துணை முதல்வரானதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
அதே போல தேர்தலில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்த நடிகர் முரளியும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தினார்.