மெல்போர்னில் பேரணி-அத்துமீறியதாக 18 இந்தியர்கள் திடீர் கைது
மெல்போர்ன்: இனவெறித் தாக்குதலைக் கண்டித்து மெல்போர்ன் நகரில் நேற்று இந்தியர்கள் நடத்திய பிரமாண்டப் பேரணியின்போது அத்துமீறி அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி 18 இந்தியர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்திய மாணவர்கள் மீது நடந்து வரும் இனவெறித் தாக்குதலைக் கண்டித்து இப்பேரணி நடந்தது.
பேரணியின்போது போலீஸார் பல இடங்களில் பேரணியை உடைக்க முயன்றதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் பேரணியின்போது அத்துமீறி நடந்து கொண்டு, அமைதியை சீர்குலைக்க முயன்றதாக கூறி 18 இந்திய இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து இந்தியத் தூதர் அனிதா நய்யார் கூறுகையில், இதுகுறித்து எங்களுக்குத் தகவல் இல்லை. யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொருவருக்கும் தங்களது உணர்வை வெளிப்படுத்த உரிமை உண்டு. அதேசமயம், ஆஸ்திரேலிய சட்டத்தை யாரும் மீறக் கூடாது என்றார்.
இதற்கிடையே, விக்டோரியா மாகாண காவல்துறை ஆணையர் சிமோன் ஓவர்லேன்ட் கூறுகையில், பேரணி நடத்த முழு உரிமை உண்டு என்பதை காவல்துறை ஏற்றுக் கொள்கிறது. அதேசமயம், பேரணியின்போது இந்தியர்கள் அல்லாத சிலரும் உள்ளே புகுந்து விட்டனர். அவர்களில் சிலர் குடிபோதையில் இருந்தனர்.
போலீஸார் தேவையில்லாமல் தங்களது பலத்தை எங்கும் பயன்படுத்தவில்லை. சில இடங்களில் பேரணியினர் அத்துமீறி நடக்க முயன்றபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது சிலருக்கு வாயில் அடிபட்டிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பேரணியை நடத்தி முடித்த பின்னரும் கூட கூட்டத்தினர் கலைந்து போகாமல் இருந்தனர். பலமுறை அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் எச்சரித்தும் அவர்கள் போகவில்லை.
போராட்டத்தின்போது ஒரு போலீஸ் அதிகாரின் கையை சிலர் கடித்து விட்டனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
பேரணியின்போது தாக்குதலில் ஈடுபட்டதாக ஒருவரைக் கைது செய்தோம். இன்னொருவர் பிலிண்டர்ஸ் தெருவில் வந்தபோது கண்ணாடி ஜன்னலை உடைத்ததாக கைது செய்ய்பட்டுள்ளார்.
மொத்தம் 18 பேர் அமைதியை சீர்குலைக்க முயன்றதாக கைதாகியுள்ளனர்.
போலீஸார் எந்த இடத்திலும் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. எங்களது நடவடிக்கைகள் நியாயமாகத்தான் இருந்தன என்றார் ஓவர்லேன்ட்.