For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்யம் 'லே-ஆப்': அரசு மூக்கை நுழைப்பது சரியா?

By Staff
Google Oneindia Tamil News

Sathyam
ஹைதராபாத்: ராமலிங்க ராஜூவின் மோசடி ஊழல் காரணமாக சத்யம் நிறுவனம் படுவீழ்ச்சியை கண்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சத்யம் நிறுவனத்தை, டெக் மஹிந்திரா ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து சத்யத்தில் சுமார் 10,000 ஊழியர்கள் வரை கூடுதலாக இருப்பதாகவும் அவர்களில் சுமார் 8,000 பேரை நீக்கப் போவதாகவும் டெக் மஹிந்திரா தெரிவித்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கார்பரேட் விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், சத்யம் ஊழியர்களுக்கு லே-ஆப் வழங்குவதை மத்திய அரசு பார்த்து, கண்களை மூடி கொண்டு இருக்காது என்றார்.

சத்யம் மற்றொரு நிறுவனத்தின் கைக்கு மாறிய பின்னரும் தொடர்ந்து அந்த விஷயத்தில் மத்திய அரசு மூக்கை நுழைந்து வருவதற்கு தற்போது கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது. இந்த பிரச்சனையில் இருந்து மத்திய அரசு விலகி கொள்ள வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவதாக, ஒரு நிறுவனம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை சொல்லும் உரிமை அரசுக்கு கிடையாது. லே-ஆப் என்பது நிறுவனத்தின் வியாபார பிரச்சனை. அதில் முடிவெடுக்கும் உரிமை நிறுவனத்துக்கு மட்டுமே இருக்கிறது.

இரண்டாவதாக, தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்கள் எளிதாக மற்ற நிறுவனத்துக்கு சென்று விடுவார்கள். அவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை (இப்போதைக்கு கொஞ்சம் சிக்கல் இருந்தாலும்). சம்பளத்தை கொஞ்சம் குறைத்து கொண்டால் அவர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள பல நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன.

அடுத்ததாக, அரசுக்கு சத்யம் நிறுவனத்தில் எந்த பங்கும் கிடையாது. அரசு அதில் எந்த முதலீடும் செய்யவில்லை. ராமலிங்க ராஜூவின் மோசடி விவகாரம் காரணமாக இடைக்கால நிறுவன சீரமைப்பில் சில உறுப்பினர்களை நியமித்து வைத்திருந்தது அவ்வளவு தான்.

அரசு அந்த நிறுவனத்துக்கு கடன் தொகை எதையும் அதிகரித்தும் வழங்கவில்லை. அதே சமயத்தில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை. இதனால் அதில் தலையிட அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

சில இக்கட்டான சமயங்களில் நிர்வாகம் லே-ஆப் போன்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், இது மிகவும் அரிதான செயல் தான். இது நிறுவனத்தை காக்கும் நோக்கத்தில் எடுக்கப்படும் அவசியமான செயல் தான்.

சத்யம் நிறுவனத்தின் விஷயங்களில் அரசு தலையிடுவது என்பது அந்த நிறுவனத்தை டெக் மஹிந்திரா வாங்கிய அன்றே முடிந்துவிட்டது. இதில் தொடர்ந்து அரசு தலையிட விரும்பினால் அது டெக் மஹிந்திரா நிறுவனத்துக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தவிர்த்து வேறு எதுவும் சொல்ல முடியாது.

தற்போது பல சாப்ட்வேர் நிறுவனங்களும், மற்ற துறையைச் சார்ந்த நிறுவனங்களும் தொடர்ந்து ஊழியர்களை நீக்கி வருகின்றன. அந்த நிறுவனங்களின் விவகாரங்களில் தலையிடாத அரசு சத்யம் நிறுவனத்துடன் மட்டும் ஏன் இந்த புதிய போக்கை மேற்கொண்டு வருகிறது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்தியாவின் கார்பரேட் விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், தான் ஒரு தவறான முன் மாதிரி உதாரணத்துக்கு வழி வகுக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதில் தலையிட்டு ராமலிங்க ராஜூவின் பழைய மோசமான காலத்து நிலைமைக்கு சத்யம் நிறுவனத்தை மீண்டும் கொண்டு சென்றுவிடக் கூடாது என்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X