மருந்து விலை குறையும்-அழகிரி
டெல்லி: ஏழை நோயாளிகள் பயன்பெறும் வகையில் மருந்து மாத்திரை பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படும். எப்படி குறைப்பேன் என்பது ரகசியம். பொறுத்திருந்து பாருங்கள் என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை தொகுதியில் இருந்து முதன் முதலாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக தென்மாவட்ட அமைப்பாளர் அழகிரி தற்போது டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
நேற்று தனது துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினர். தனது பார்வையின் கீழ் விவகாரங்களையும், பொறுப்புகளையும் அறிந்து கொண்டார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
விவசாயிகளுக்கு மானிய விலையில் தேவையான உரங்கள் கிடைக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
உர உற்பத்தியை நவீனப்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். மூடப்பட்டுள்ள பல உர ஆலைகள் திறக்கப்படும். அவை சீரமைக்கப்பட்டு உற்பத்தி பெருக்கப்படும். பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் விநியோகம் சீராக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மருந்து பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் ஏழை நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் குறைகளை போக்கும் வகையில் மருந்து, மாத்திரை போன்றவை நியாயமான விலையில் எந்த தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கும். இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மருந்து மற்றும் மாத்திரை உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். புதிய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். மேலும் இந்த துறையில் மனித ஆற்றலை விரிவுபடுத்தி, வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
கடந்த முறை இப்பதவியில் இருந்த ராம் விலாஸ் பஸ்வான் பல முறை முயன்று அவரால் முடியவில்லை. உங்களால் எப்படி முடியும் என கேட்கிறார்கள். நான் எப்படி குறைப்பேன் என்பது ரகசியம். பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அழகிரி.