காங்கிரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது தவறு-சிபிஐ
டெல்லி: மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற முக்கிய காரணகர்த்தவாக இருந்த எங்களின் உழைப்பு மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இது தான் நாங்கள் செய்த தவறு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி கடந்தாண்டு மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. மேலும், தேர்தலுக்கு பின் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமைப்போம் என பெருமையடித்து வந்தது.
ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பு அதற்கு நேர்மாறாக இருந்தது. கம்யூனிஸ்ட் தலைமையிலான மூன்றாவது அணிக்கு பெருத்தி பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பரதன் கூறுகையில்.
கடந்த ஆட்சியின் முதல் நான்கரை ஆண்டுகள் கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட முக்கிய காரணமாக இருந்தனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம், பழங்குடியினருக்கான வன உரிமை சட்டம் போன்றவற்றை கொண்டு வந்தோம்.
ஆனால், கடைசி ஆறு மாதத்துக்கு முன்பாக மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற முக்கிய காரணகர்த்தவாக இருந்த எங்களின் உழைப்பு மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இது தான் நாங்கள் செய்த தவறு.
தேர்தலில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அணுசக்தி ஒப்பந்தத்தை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என்றார் பரதன்.