நிருபரை கடத்தி இலங்கை அரசு கொடுமை!
இலங்கை அரசின் உளவுப் பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
பொட்டல ஜெயந்தா என்ற அந்த நிருபர் கொழும்பில் உள்ள நெகெகொடா அருகே தனது வீட்டருகே நேற்று ஒரு கும்பலால் வேனில் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார்.
மேலும் அவரது தாடியையும் முடியையும் வெட்டி எரிந்த அந்தக் கும்பல் சில கி.மீ தூரத்தில் வேனில் இருந்து இவரை தூக்கி எறிந்துவிட்டு தப்பிவிட்டது. இதில் அவருக்கு தலை, காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கை பத்திரிக்கையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள இவர் பத்திரிக்கை சுதந்திரத்துக்காகவும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருபவர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் உடல் நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதற்கு முன்பும் ஜெயந்தாவை அரசு ஆதரவு கும்பல் ஒன்று கடத்த முயன்றுள்ளது. இதையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசித்து வந்த இவர் சமீபத்தில் தான் நாடு திரும்பினார்.
இலங்கை அரசின் அடக்குமுறைகளால் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 20க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் தெரிவித்துள்ளது.