குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டினால் தங்க மோதிரம்!
சென்னை: சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது.
இது குறித்து மேயர் சுப்பிரமணியன் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
முதலமைச்சர் கருணாநிதி நாளை 86வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழுக்காக அவர் பாடுபட்டு வருகிறார். அதன் அடையாளமாக அவரது பிறந்த தினமான நாளை முதல் சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தமிழ்ப் பெயர் சூட்டினால், மாநகராட்சியின் சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு அளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
குழந்தை பிறந்த 15 நாட்களுக்குள் இந்த தங்க மோதிரம் வழங்கப்படும். குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயர் தமிழ் பெயர் தானா என்பதை இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு பரிசீலித்து உறுதிப்படுத்தியதும் தங்க மோதிரம் பரிசு அளிக்கப்படும்.
சென்னை மாநகராட்சியின் குடும்ப நலத்துறை மகப்பேறு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அந்த மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக சிறந்து விளங்குகின்றன.
இதன் காரணமாக மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சென்னையில் மழை நீர் வடிகால் வாய்களை தூர்வாறும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், புதிய வடிகால்களை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டும் உள்ளன என்றார்.