ஜிஎம் திவாலானதால் பாதிப்பில்லை-விப்ரோ
மும்பை: ஜிஎம் நிறுவனத்தின் திவால் அறிவிப்பு தங்கள் நிறுவனத்தைப் பாதிக்கவில்லை என விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
'அமெரிக்காவில் தேள் கொட்டினா இந்தியாவில் நெறிகட்டும்' என்ற புதுமொழிக்கேற்ப, அமெரிக்காவில் எந்த நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தாலும் அதன் முதல்பாதிப்பு தெரிவது இந்தியாவில்தான்.
காரணம் ஏதாவது ஒரு வகையில் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் நிறுவனங்களைச் சார்ந்தே இயங்குகின்றன.
பிபிஓ முறையில் பணிகளைச் செய்து தருதல், நிர்வாகப் பணிகளைச் செய்து தருதல், தொழில் நுட்ப உதவிகளைச் செய்தல் என பல காரணங்களுக்காக இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன.
முன்பு லேஹ்மன் பிரதர்ஸ் வீழ்ந்ததும் பல இந்திய நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பாடு திண்டாட்டமானது. பிபிஓ நிறுவனங்கள் பலவற்றை மூடும் நிலை உருவானது.
தொடர்ந்து கிட்டத்தட்ட 50 அமெரிக்க வங்கிகள் திவாலாகிவிட அல்லது மூடப்பட்டுவிட, அவற்றுக்கு இந்தியாவில் வேலைபார்த்த சிறிய பெரிய நிறுவனங்கள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மூடப்பட்டன.
இப்போது மீண்டும் ஜிஎம் நிறுவனம் என்ற மிகப் பெரிய அமெரிக்க வர்த்தக சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டுள்ளது. நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் அரசின் வசம் சென்றுவிட, பழைய செட்டப்பை அப்படியே கலைத்துவிட்டு, முழுக்க முழுக்க சுதேசி அமைப்பாக மாறுகிறது ஜெனரல் மோட்டர்ஸ். காரணம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பொருளாதாரக் கொள்கை.
இந்த வீழ்ச்சியால் இந்திய நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது வெளிப்படையாகவே தெரியத் துவங்கியுள்ளது.
இதன் பாதிப்பு வெளியில் பரவும் முன்பே, டேமேஜ் கன்ட்ரோல் முயற்சியாக முதல் அறிக்கை வெளியிட்டுள்ளது முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ.
ஜெனரல் மோட்டார்ஸுக்கு பல்வேறு பணிகளை இந்தியாவில் செய்து வந்த பல இந்திய நிறுவனங்களில் முக்கியமானது விப்ரோ.
இதுகுறித்து விப்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"ஜிஎம் வீழ்ச்சியால் எங்களுக்கு பாதிப்பில்லை. குறைந்த அளவு பணிகளைத்தான் நாங்கள் செய்து வந்தோம். இப்போது இன்னும் குறைவான பணிகள் எங்களுக்கு கிடைக்கலாம். ஆநால் அது நிறுவனத்தை பாதிக்காது", என்று கூறியுள்ளது.