ஏசி வெடித்து குழந்தை உடல் கருகி பலி
தாம்பரம்: சென்னையில் ஏசி வெடித்து தீ பிடித்ததில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை உடல் கருகி பலியானது.
சென்னை சிட்லபாக்கம் எம்எம்டிஏ நகரை சேர்ந்தவர் ஸ்ரீவள்ளி (33). இவர் வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இவரது கணவர் சண்முகசுந்தரம் சமீபத்தில் வேலை காரணமாக சிங்கப்பூர் சென்றார்.
இதையடுத்து வீட்டில் ஸ்ரீவள்ளி தனது எட்டு வயது மகன் நாகர்ஜூனன் மற்றும் ஒன்றரை வயது மகள் மோனிஷா ஆகியோருடன் இருந்தார். ஸ்ரீவள்ளி வழக்கம் போல் குழந்தைகளுக்கு நேற்று இரவு சாப்பாடு கொடுத்துவிட்டு அவர்களுடன் ஏசி அறையில் தூங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவர்கள் வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்த்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும், சிட்லாபாக்கம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீ வேகமாக பரவி வருவதை பார்த்த பொது மக்கள் போலீசார் வரும் வரை காத்திருக்காமல் வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். புகை வரும் அறையின் கதவையும் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது ஏசி வெடித்து தீ பரவியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஒன்றரை வயது குழந்தை மோனிஷா தீயில் கருகி பலியானது தெரியவந்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீவள்ளியும், அவரது மகனும் தீக்காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் கிடந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மின்சார கோளாறு காரணமாக ஏசி வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதாவது காரணமா என்று விசாரணை நடக்கிறது.
ஸ்ரீவள்ளியும், அவரது மகனும் மயக்கம் தெளிந்து விளக்கம் தந்தால் தான் எதையும் உறுதிசெய்ய முடியும் என போலீசார் கூறினர்.