ஆட்சியில் பங்கு-காங் எம்எல்ஏக்கள் டெல்லிக்கு 'காவடி'?
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியில் பங்கு கேட்டு தலைமையை வலியுறுத்த 25க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய ஆட்சியில் திமுக பங்கு வகித்து வரும் நிலையில் தமிழகத்தில் தங்களது ஆதரவுடன் ஆட்சி நடத்தும் திமுகவும் தங்களுக்கு அமைச்சர், வாரியத் தலைவர்கள் பதவிகளைத் தர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரி வருகின்றனர்.
ஆனால், இந்தக் கோரிக்கையை திமுக நிராகரித்து வருகிறது. அதே போல தமிழக காங்கிரசாரின் கோரிக்கையை அக் கட்சியின் தலைமையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
இந் நிலையில் மீண்டும் இந்தக் கோரிக்கை வலுக்க ரம்பித்துள்ளது.
சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் தலைமையில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து நிருபர்களிடம் பேசிய சுதர்சனம், காங்கிரஸ் ஆண்டி மடம் நடத்தவில்லை. அதனால் ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை என்றார்.
மேலும் தீவிர அதிமுக ஆதரவாளரான கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலுவும் ஆரம்பத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். திருச்சியில் நடந்த திமுக மாநாட்டிலும் இந்தக் கோரிக்கையை வைத்தார்.
அதற்கு அதே மேடையில் பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி, தமிழகத்தில் பங்கு என்று கூறுபவர்கள் அருகில் உள்ள புதுச்சேரியையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை உங்கள் மேலிடத்தில் சொல்லுங்கள், முடிவெடுக்கிறேன் என்றார். புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் தான் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல இளங்கோவன் கோஷ்டியும் அவ்வப்போது ஆட்சியில் பங்கு கோஷத்தை எழுப்பி வந்தது. ஆனால், காங்கிரசின் பெரிய கோஷ்டியின் தலைவரான வாசன், இந்த விஷயத்தில் திமுகவுக்கு நெருக்கடி தர மறுத்து வருகிறார்.
இந் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் கூடி ஆட்சியில் பங்கு குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. அதில், நாம் டெல்லிக்குச் சென்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தலைமையில் ராகுல் காந்தியை சந்தித்து தமிழக அமைச்சரவையில் தங்களுக்கு பங்கு வேண்டும் என்று வலியுறுத்தலாம் என்று முடிவானதாகத் தெரிகிறது.
வரும் 17ம் தேதி சட்டசபை கூடும் முன் நல்ல முடிவை எடுக்காவிட்டால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத் தொடரை புறக்கணிக்கலாம் என்றும் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த விவரங்களை அறிந்துள்ள திமுக தரப்பு, இது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் பேசி தமிழக எம்எல்ஏக்களை அடக்கும் என்று தெரிகிறது.