பெண் டாக்டரிடம் ரூ1.13 கோடி மோசடி-பெண் கைது
சென்னை: பெண் டாக்டரிடம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுத் தருவதாக கூறி அதற்கான கமிஷனாக ரூ. 1.13 கோடியை வாங்கிக் கொண்டு மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூரை சேர்ந்த டாக்டர் சித்ரா கடந்த 2007ம் ஆண்டு போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில்,
மாயா ராம் என்ற ஒரு பெண் தன்னை டாக்டர் என்று கூறிக் கொண்டு அறிமுகமானார். இவரது நண்பர்கள் பிரான்சில் ஒரு டிரஸ்ட் ஒன்று நடத்தி வருவதாகவும், அந்த டிரஸ்டுக்குச் சொந்தமான ரூ.55 ஆயிரம் கோடி பணத்தை டெல்லியில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளதாகவும்,
இந்தியாவில் மருத்துல சேவை புரியும் நிறுவனங்களுக்கு அவர்கள் நிதியுதவி செய்து வருவதாகவும் கூறினார். மேலும் நான் மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.1,000 கோடி நிதியுதவியை பெற்றுத் தருவதாகவும் கூறி, அதற்கான கமிஷனாக ரூ.1.13 கோடியை வாங்கிக் கொண்டார்.
ஆனால், நிதியுதவியும் வரவில்லை. நான் கொடுத்த கமிஷன் பணத்தையும் திருப்பி தராமலும் தலைமறைவாகி விட்டார் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. உதவி கமிஷனர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி தலைமறைவான மாயா ராமை (57) தேடி வந்தனர்.
இந் நிலையில் அவர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த தனிப் படை அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தது.
அவரிடம் விசாரித்ததில் இதுபோல பல டாக்டர்களை இவர் ஏமாற்றிய விவரம் தெரியவந்தது.
மாயா ராமிடம் இருந்த 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை போலீஸ் காவலில் எடுத்து முழுமையாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.