For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னித் தமிழர்கள்-தலைமை நீதிபதி வேதனை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: வன்னியில் உள்ள இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நிலையைப் பார்த்து நான் பதை பதைத்துப் போனேன். இலங்கை சட்டம் இந்தப் பரிதாப மக்களுக்கு எந்த நீதியையும் வழங்காது என்பதை பகிரங்கமாக கூறுகிறேன். இதற்காக அரசு என்னை தண்டித்தாலும் தண்டிக்கும் என்று அந்த நாட்டு தலைமை நீதிபதி சரத் சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் சரத் சில்வா. விரைவில் இவர் ஓய்வு பெறவுள்ளார். சமீபத்தில் இவர் இடம் பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களை பார்வையிட்டார்.

அங்கு தமிழர்கள் மிகக் கொடுமையான நிலையில் இருப்பதாகவும், அவர்களின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் அவர்களின் நிலையைப் பார்த்து தான் பதை பதைத்துப் போனதாகவும் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைடயின் சட்டங்கள் இவர்களுக்கு நீதியை வழங்காது என்றும் அவர் பரபரப்பாக பேசியுள்ளார்.

நெகம்போ மாவட்டம், மரவில்லா என்ற இடத்தில் நடந்த நீதிமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் அவர் பேசுகையில்,

வன்னிப்பகுதியில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்கள் இலங்கை நாட்டின் சட்டப்படி நீதியை பெற முடியாது. போரால் இடம் பெயர்ந்த தமிழர்களின் நலனில் இந்த நாட்டு சட்டம் எந்த அக்கறையும் செலுத்தாது. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன்.

இவ்வாறு நான் சொல்வதற்காக நான் அரசாங்கத்தால் தண்டிக்கப்படலாம்.

நான் வன்னிப்பகுதி தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களுக்கு சென்று பார்த்தேன். அவர்கள் படும் துன்ப துயரங்களையும், வேதனைகளையும் என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.

பெரும்பான்மை என்றோ, சிறுபான்மை என்றோ எதுவும் கிடையாது என்றெல்லாம் நாம் கூறுவது பச்சை பொய்யாகும்.

போரால் இடம் பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் வசிக்கும் செட்டிக்குளம் முகாம்களுக்கு சென்று நான் பார்த்தேன். அவர்கள் சந்தித்து வரும் மிகப் பரிதாபமான நிலையை என்னால் வார்த்தை களில் சொல்ல முடியவில்லை.

அவர்களுக்கு நான் எந்த ஆறுதலையும் கூற முடியவில்லை. மிகக் கடுமையான துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே அவர்கள் உயிர் வாழ்த்து வருகிறார்கள்.

மிக பிரம்மாண்டமான கட்டிடங்களை ஒருபுறம் நாம் கட்டி வருகிறோம். ஆனால் போரால் இடம் பெயர்ந்த இந்த தமிழர்கள் மிகச் சிறிய கூடாரங்களில் வசித்து வருகிறார்கள். ஒரே கூடாரத்தில் 10 பேர் வாழ்கிறார்கள். அந்த கூடாரத்தில் அவர்கள் நேராக நிற்கத்தான் முடியும்.

கூடாரத்திற்கு வெளியே செல்ல முயன்றால் அவர்கள் கழுத்தே உடைந்து விடும் என்று நிவாரண முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை உபாதைகளுக்கு செல்வதற்கு கூட 100 கெஜ தூரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்று அவர்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. செட்டிக்குளம் முகாமில் தங்கி உள்ள வன்னித் தமிழர்களின் வாழ்க்கை நிலைதான் இது.

அவர்களுக்கு போதுமான அளவிற்கு நாம் நிவாரணம் வழங்க வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அதற்கான பழியை நாம் தான் ஏற்க வேண்டும். இந்த நாட்டின் சட்டத்தின் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது.

அவர்களுடைய துயர நிலைகள், நீதிமன்றத்திற்கு முன் கொண்டு வரப்படவில்லை. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசியுள்ளார் சில்வா.

வன்னித் தமிழர்கள் சந்தித்த பேரவலத்தையும், பெரும் அநீதியையும் அந்த நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பேச்சு மறைமுகமாக நிரூபிப்பதாக உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X