தீ: உடல் கருகி பெண் பலி-500 வாகனங்கள் சேதம்
சென்னை: சென்னை அருகே வேப்பமுத்து ரயில்வே நிலையத்துக்கு அருகே இருந்த இரு சக்கர வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் பலியானார். சுமார் 500 பைக் மற்றும் சைக்கிள்கள் நாசமடைந்தன.
சென்னையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் வேப்பம்பட்டு ரயில்வே நிலையம் இருக்கிறது. இங்கிருந்து தினமும் ஏராளமானவர்கள் வேலை நிமித்தமாக சென்னைக்கு போய் வருவதால் அப்பகுதியில் இருக்கம் இரு சக்கர வாகன நிறுத்தத்தில் கூட்டமி நிரம்பி வழியும். அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும்.
இந்நிலையில் நேற்று காலை இரு சக்கர வாகன நிறுத்தத்துக்கு அருகில் இருந்த குப்பைக்கு யாரோ சிலர் தீ வைத்துள்ளனர். அப்போது நன்றாக காற்று வீசியதால் தீ அருகில் இருந்த குடிசைக்கும், இரு சக்கர வாகன நிறுத்ததுக்கு பரவியது.
இதையடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளின் எரிபொருள் டாங்குகள் வெடித்தன. தீ மளமளவென பரவி இரு சக்கர வாகன நிறுத்தத்தை ஆக்ரமித்தது. அந்த வாகன நிறுத்தத்தில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட சைக்கிள்கள், பைக்குகள் எரிந்து சாம்பலாகின.
இதை தொடர்ந்து தீ அருகிலிருந்த மளிகை கடைக்கும் பரவியது. அதில் கடையில் இருந்த நந்தகோபால் என்பவரின் மனைவி வித்யா (27) என்பவர் தீயில் உடல் கருகி பலியானார்.
இந்த சம்பவத்தை அடு்தது சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் சுமார் 1 மணி நேரம் நிறுத்தப்ப்டடது. மேலும் அப்பகுதியில் தென்னக ரயில்வே சிறிது நேரம் மின்சார இணைப்பையும் துண்டித்தது. இதனால் மின்சார ரயில்களும் இயங்கவில்லை.
தீ விபத்து 10.30 மணிக்கு மேல் நடந்ததால் வேலைக்கு செல்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இரு சக்கர வாகன நிறுத்தத்தில் பைக், சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றவர்கள் அலுவலகம் விட்டு வரும்போது அந்த பகுதி தீக்கு இரையானதை கண்டு அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.