For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி ஒதுக்கீடு: சிறந்த மாநிலங்களை புறக்கணிப்பதா?-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பங்கிலிருந்து செயல்படாத மாநிலங்களுக்கு வெகுமானம் அளிப்பதை தவிர்க்கும் வகையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி பகிர்ந்தளிக்கும் முறை மாற்றி வடிவமைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நல்ல கோரிக்கையை விடுத்துள்ளார்.

கோடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்தவாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவின் கூட்டு அரசியல் என்பது தொடர்ந்து மிகவும் ஒருமுகப்படுத்தப்பட்ட முறையாக உள்ளது. திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவர்கள் நினைத்த மாநிலங்களுக்கான முழு தன்னாட்சி அதிகாரம் என்பது இன்னமும் படிப்படியாக நிறைவேறும் நிலையில் தான் இருக்கிறது.

இந்த அடிப்படை பிரச்சினை எழுவதற்குக் காரணம், மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைந்த அதிகாரங்கள் காரணமாக நிதித் தேவைக்கு மாநிலங்கள் மத்திய அரசை சார்ந்திருப்பது தான். வலுவான மாநில கட்சிகள் உருவாகி வருவதாலும், கூட்டணி கட்சிகளின் ஆட்சி மத்தியில் ஏற்பட்டு வருவதாலும் அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறியுள்ளது.

மத்திய அரசுக்கு எதிரான கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் மாநில கட்சிகள் அடுத்தடுத்து நல்ல சலுகைகளை பெற்று வருகின்றன. மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கும் போதும், மானியங்களை வழங்கும் போதும், மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம்வகிக்கும் மாநில கட்சிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், அரசியல் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் முடிவெடுக்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி மத்திய அரசின் நிதி சென்றடையும் வகையில் நிதி பகிர்ந்தளிப்பு கொள்கையை நிதி ஆணையம் வகுக்க வேண்டியது அவசியமாகிறது.
நிதி ஒதுக்கீடு தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள அளவுகோல்கள் போதுமானதாகவும், எளிதில் பின்பற்றக் கூடியதாகவும், தவறுகள் ஏற்படா வண்ணமும் இல்லை.

மாநிலங்களுக்கான மத்திய அரசின் திட்ட ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட 'காட்கில் முறை' மாற்றம் செய்யப்பட்டு திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதற்கான வழிகாட்டுமுறைகள் பின்பற்றப்படும்போது திறமை, பொருளாதாரம், நிதி ஒழுக்கம் மற்றும் தகுந்த அளவு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

வரிகளிலிருந்து வரும் வருமானத்தை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வதில் என்ன கொள்கை அல்லது பகிர்ந்தளிப்பு முறை பின்பற்றப்படுகிறது?. மாறிக் கொண்டு வரும் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிதிப்பங்கீட்டை ஒழுங்குபடுத்தி நிர்ணயிக்க எந்த நிரந்தர முறையும் தற்போது கடைப்பிடிக்கப்படவில்லை.

இதன் காரணமாக நிதி ஒதுக்கீடு என்பது வளைந்து கொடுக்கும் நிலையில் இருக்கிறது. இதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலை உள்ளது. நிதிப்பங்கீட்டுக் கொள்கையை நிர்ணயம் செய்யும்போது வெவ்வேறு நிதி ஆணையங்கள் வெவ்வேறு அளவுகோல்களை பின்பற்றி உள்ளன.

குறிப்பிட்ட காரியத்திற்கென்று நிதி ஒதுக்குவதையோ அல்லது வளைந்து கொடுக்கக்கூடிய முறையை பின்பற்றுவதற்கு பதிலாக, குறிக்கோளுடன் கூடிய, ஏற்கும் அளவுகோலை உடைய முறை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

உதாரணமாக, நான்கு தென் மாநிலங்களும் நடுத்தர வருமானத்தை உடைய மாநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை இந்த மாநிலங்கள் அளிக்கின்றன. இந்த மாநிலங்களின் வரி ஆதாரங்கள் உயர்ந்து கொண்டே போவதற்கு ஏற்ப, மத்திய வரிகளுக்கு இந்த மாநிலங்களின் பங்களிப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

ஆனால், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடும், மானிய உதவிகளும் குறைந்து கொண்டே வருகின்றன. திறமையாக தங்கள் பணியை செய்யும் மாநிலங்களை இது பாதிக்கிறது. எனவே, இந்த நிதி ஒதுக்கீடு முறை வேறு வகையில் மாற்றி வடிவமைக்கப்பட வேண்டும்.

மத்திய வரிகளின் பங்கு ஏழ்மையான மற்றும் சிறப்பாக செயல்படாத மாநிலங்களுக்கு அதிகமாக செல்லும் அதே சமயத்தில், அந்த மாநிலங்களின் வளர்ச்சியில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. மற்றொரு பக்கம், நன்கு செயல்படும் மாநிலங்களான மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் மத்திய வரிகளின் பங்கு சரிந்துள்ளது.

சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பங்கிலிருந்து செயல்படாத மாநிலங்களுக்கு வெகுமானம் அளிப்பதை தவிர்க்கும் வகையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி பகிர்ந்தளிக்கும் முறை மாற்றி வடிவமைக்க வேண்டும்.

மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒத்துழைப்பு மற்றும் இணக்கமான உறவை உறுதி செய்யும் வகையில் உண்மையான கூட்டு முறை உருவாக்கப்பட வேண்டியது தற்போதைய தேவை. அதிகபட்ச நிதி தன்னாட்சி முறையை மாநிலங்களுக்கு வழங்குவதன் மூலம் வலுவான இந்தியா உருவாகும் என அதிமுக உறுதியாக நம்புகிறது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X