விலை உயர்வு:ஆவின் பாலுக்கு 'மவுசு' அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு நாளில் 22 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. இதில் தமிழ்நாடு கூட்டுறவு பால் சங்கத்தின் நிறுவனமான ஆவின் பாலின் பங்கு 10.45 லட்சம் ஆகும்.
சேலம், ஈரோடு, திருச்சி, காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் பால் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை நகருக்கு கொண்டு வரப்படுகிறது. சோழிங்கநல்லூர், அம்பத்தூர், மாதவரம் ஆகிய பால் பண்ணைகளில் பாலை பதப்படுத்திகிறது. இது சென்னையில் இருக்கும் 3,000 ஏஜென்ட்டுகள் மூலம் விற்கப்படுகிறது.
இந்நிலையில் தனியார் பாலை ஆவின் பாலின் விலையும் குறைவாக இருப்பதால் மக்கள் மத்தியில் ஆவின் பாலுக்கு தினமும் மவுசு அதிகரித்து வருகிறது. ஆவின் பால் அரைலிட்டர் ரூ. 9க்கும், 1 லிட்டர் ரூ. 18க்கும் கிடைக்கிறது. மற்ற தனியார் பால்கள் இதைவிட ரூ. 3 முதல் 4 வரை அதிகம் வைத்து விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் சுத்தமான கலப்படம் அற்ற பாலும் விற்கப்படுவதால் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கோடை காலத்தில் பாலின் உற்பத்தி குறைந்துவிடும் என்பதால் அந்த சமயங்களில் சில தனியார் பால் நிறுவனங்கள் விலை கூட்டிவிடுவதாலும் ஆவின் பாலின் தேவை அதிகரித்துள்ளது.
தற்போது சென்னையில் புறநகர் பகுதிகளுக்கு மட்டும் 20 லட்சம் லிட்டர் ஆவின் பால் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அட்டைதாரர்களுக்கு ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது. தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் பாலுக்கு தேவை அதிகரித்துள்ளது.
இதனால் டீக்கடை, ஹோடல்களில் ஆவின் பாலை மொத்தமாக வாங்கி வைத்து கொள்கின்றனர். இதனால் சில இடங்களில் பொதுமக்கள் பால் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதை தடுக்க முறையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.