திருப்பதியில் ரூ. 18 கோடி செலவில் 2 புதிய விடுதிகள்
திருப்பதி: திருப்பதியில் ரூ. 18 கோடி செலவில் இரண்டு புதிய விடுதிகளை திருப்பதி திருமலை தேவஸ்தானம் கட்டியுள்ளது. விரைவில் இதை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி திறந்து வைக்கிறார்.
ஆந்திராவில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிகின்றனர். அவர்கள் காணிக்கையாக பொன்னும், பொருளும் கொட்டி வருவதால் இந்தியாவின் பணக்கார கடவுளாக திருப்பதி திகழ்கிறார்.
பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் அதிகரிப்பதால் திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்கள் உடனடியாக தரிசனம் செய்துவிட முடியாது. ஒரிரு நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அந்த சமயங்களில் பக்தர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ. 18 கோடி செலவில் இரண்டு புதிய தங்கும் விடுதிகளை அமைத்துள்ளது.
கில்வியூ காட்டேஜ் அருகில் ஒரு விடுதியும், மாதவ நிலையம் காட்டேஜ் அருகில் மற்றொரு விடுதியும் கட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விடுதிகளுக்கும் பாஞ்சன்யம், சன்னிதானம் என இரண்டு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இந்த விடுதிகளை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விரைவில் திறந்துவைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.