விமான நிலையத்தில் அதிகாரிகள் மோதல்-அழகிரி, எம்.பி.க்கள் அவதி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ராணுவ அதிகாரிக்கும், விமான நிலைய அதிகாரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்போது அங்கு வந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் எம்.பி.க்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்கும் நோக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து விமான நிலையத்துக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே தடுப்பு பலகைகள் அமைக்கபபட்டுள்ளன.
குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை விமான நிலையத்துக்கு குல்கர்னி என்ற ராணுவ அதிகாரி தடுப்புகளை அகற்றிவிட்டு காரில் விமான நிலையம் அருகே வரை சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த ராணுவ அதிகாரிக்கும், விமான நிலைய போக்குவரத்து அதிகாரி வேணுகோபால், விமான நிலைய மேலாளர் போராவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதை தொடர்ந்து விமான நிலைய அதிகாரி தனது மேலதிகாரிக்கு புகார் கொடுத்துள்ளார்.
இந்த மோதல் நடந்து கொண்டிருந்த வேலையில் மத்திய அமைச்சர் அழகிரி, தமிழக எம்.பி ஜெயதுரை, மாணிக்க தாகூர் மற்றும் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் வந்தனர்.
அந்த ராணுவ அதிகாரி தடுப்புகளை அகற்றிவிட்டு சென்றதால் அழகிரி உள்ளிட்டோர் வெகு தொலைவில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.