ஜனாதிபதி உரையில் சேது, ஈழம் இல்லாதது ஏமாற்றம்-திருமா
சிதம்பரம்: ஜனாதிபதி உரையில் ஈழத் தமிழர் விவகாரம், சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட விஷயங்கள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் தனக்கு வாக்களித்து எம்.பி. பதவி வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சிதம்பரம் வந்திருந்தார்.
அண்ணாமலை நகர், லால்பேட்டை, காட்டுமன்னார் கோயில் என பல இடங்களில் திறந்த வேனில் இருந்தபடியே நன்றி கூறினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 2ம் தேதி எம்.பி.யாக பதவியேற்றேன். நேரு, அண்ணா போன்ற பெரும் தலைவர்கள் இருந்த நாடாளுமன்றத்தில் மக்களுக்காக நானும் வாதாட சென்றது மகிழ்ச்சி அளிக்கின்றது. பல தேசிய தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக சரத்யாதவ் தெரிவித்த கருத்துக்கு எனது முழு ஆதரவு உண்டு. அவரது கருத்தை வரவேற்கிறேன்.
காட்டுமன்னார் கோயில் சட்டசபைக்கு உட்பட்ட நந்திமங்கலம், திருநாரையூர் என்ற இரண்டு கிராமங்கள் மழைகாலத்தில் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. இந்த கிராமங்களில் தலா ரூ. 23 லட்சம் செலவில் புயல் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏழை மக்களுக்கு கூரை இல்லாத வீடு வழங்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையாகும். தற்போது ஜனாதிபதி உரையில் ஏழை மக்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நான் வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் ஜனாதிபதி உரையில் சேது சமுத்திர திட்டம், இலங்கையில் ஈழத் தமிழர்கள் மக்கள் படுகொலை உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மத்திய திட்ட அமைச்சர் புதுச்சேரி நாராயணசாமியை சந்தித்து சிதம்பரம் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் கொண்டுவருவதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.
தொடர்ந்து இத்தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் ஊர்வாரியாக மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறேன் என்றார் திருமாவளவன்.