ஆஸி.யில் நீடிக்கும் இனவெறி அட்டகாசம் - இந்தியர் கார் எரிப்பு
22 வயதான விக்ராந்த் ராஜேஷ் ரத்தன் என்பவர் அங்கு படித்து வருகிறார். பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து வரும் அவர், தனது சம்பளத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியிருந்தார்.
இந்த காரைத்தான் நேற்று இனவெறியர்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்தக் கார் தவிர அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியர்களுக்குச் சொந்தமான வேறு இரு கார்களும் தாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரத்தன் கூறுகையில், நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் தீப்பிடித்துக் கொண்டவுடன், அபாய மணி ஒலித்தது. இதையடுத்து நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது கார்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.
போதைக் கும்பல் செய்த வேலையாக இது இருக்கும் என சந்தேகிக்கிறோம். அவர்கள் அந்தப் பகுதியில்தான் உட்கார்ந்திருப்பது வழக்கம்.
காரைத் திறக்க அவர்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால் அதை திறக்க முடியாததால், பெட்ரோலை ஊற்றி காரை தீவைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார்.
லூதியானாவைச் சேர்ந்த ரத்தன், ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆட்டோமோட்டிவ் என்ஜீனியரிங் படிப்பதற்காக ஆஸ்திரேலியா வந்தார்.
சில நாட்களுக்கு முன்புதான் தனது காரை 2500 டாலர் கொடுத்து வாங்கினார். காரை இன்னும் இன்சூரன்ஸ் கூட பண்ணவில்லையாம்.
விக்டோரியா போலீஸில் இதுகுறித்து புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் இது இனவெறித் தாக்குதல் இல்லை என்று போலீஸார் கூறுகின்றனர்.