சென்செக்ஸ் நிலவரம்...'கலவரம்'!
மும்பை: வாரத்தின் முதல்நாளே சோதனையா இருக்கே என முதலீட்டாளர்கள் புலம்பும் அளவுக்கு மோசமான வர்த்தகம் நடந்தது இன்று சென்செக்ஸில்.
எதிர்பாராத வகையில் 500 புள்ளிகள் மளமளவென வீழ்ந்தன. வழக்கம் போல இன்றும் 'அள்ளி விடலாம்' என்ற கணக்கோடு பெரிய அளவில் பங்குகளை வாங்கியவர்கள் பேரளவு நஷ்டத்துடன் இன்று நடையைக் கட்டினர்.
சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 492 புள்ளிகள் சரிந்து 14611 புள்ளிகளைக் காட்டியது. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் சரிவு கடுமையாக இருந்தது. 177 புள்ளிகள் குறைந்துவிட்டது.
நடுத்தரப் பங்குகளில் முதலீடு செய்தவர்களும், இத்தனை நாள் சம்பாதித்ததை இழக்கும் அளவு மோசமாக இருந்தது வர்த்தகம்.
அதிக இழப்புகளைச் சந்தித்தது ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள்தான். 10.92 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்தன.
ஜெய்ப்பிரகாஷ் அஸோசியேட்ஸ், டிஎல்எப், டாடா ஸ்டீல் போன்ற நிறுவனப் பங்குகள் இன்று 10 சதவிகிதத்துக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்தன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனப் பங்குகளிலும் சரிவு கடுமையாகவே இருந்தது.
டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போஸிஸ் பங்குகள் மட்டுமே ஓரளவு தப்பித்தன.