ஈழத்தமிழர் விவகாரம்-இலங்கை விரைகிறார் ஜப்பான் தூதர்
கொழும்பு: இலங்கையில் இடம்பெயர்ந்து தவித்து வரும் 3 லட்சம் அப்பாவி தமிழர்கள குறித்து ஆலோசிக்க ஜப்பான் தூதர் இன்று கொழும்பு செல்ல இருக்கிறார்.
விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கை அரசு ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது. தற்போது போர் முடிந்த நிலையில் இலங்கையில் இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருந்து எதுவுமில்லாமல் தவித்து வருகின்றனர்.
தங்களது சொந்த மண்ணில் அகதிகளாக இருக்கும் அவர்கள் முகாம்களில் நெருக்கடியடித்து கொண்டு உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ்கிறார்கள். அங்கு அடிக்கடி காணாமல் போகும் தமிழ் இளைஞர்கள் திரும்ப வருவதில்லை.
இந்நிலையில் இலங்கைக்கு அதிக நிதி உதவி அளித்து வரும் ஜப்பான் அரசு தனது தூதர் யாசசி அகாசியை இன்று இலங்கை அனுப்புகிறது. அவர் அங்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்வார் என தெரிகிறது.
இது குறித்து இலங்கையில் இருக்கும் ஜப்பான் தூதரக செய்தி ஒன்று கூறுகையில்,
இலங்கையில் இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார். அவர் அரசு மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களை சந்தித்து கருத்துக்களை கேட்கிறார். அரசியல் அமைப்பு முறையில் தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டு கொள்வார் என்கிறது அந்த செய்தி.
கடந்த 2003ல் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் நார்வே அமைதி பேச்சுவார்த்தை நடத்திய போது அகாசி, இலங்கை அரசுக்கு ரூ. 22,000 கோடி நிதி உதவி பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.