அமைசசகர்-எம்எல்ஏ சிபாரிசு கூடாது: துரைமுருகன்
சென்னை: பிரச்சனை எதுவானாலும் என்னிடம் நேரில் வந்து உண்மையை சொல்லுங்கள். அமைச்சர்களை, எம்எல்ஏக்களை சிபாரிசுகளை கொண்டு வராதீர்கள் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
பொதுப் பணிதுறையில் 244 பேருக்கு உதவிப் பொறியாளர் பதவிக்கான நியமனமும், 315 பேருக்கு இளநிலை உதவியாளர் வேலைக்கான உத்தரவும் வழங்கி துரைமுருகன் பேசுகையில்,
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
பொதுப் பணித்துறை முக்கியமான துறையாகும். இதிலிருந்து தான் மின்சாரத்துறை, நீர்வளத்துறை, மாசுகட்டுப்பாட்டுத் துறை என பல துறைகளும் பிரிந்து சென்றன. ஏரிகளை ஆக்கிரமிப்பது போல பொதுப் பணித்துறையையும் ஆக்கிரமித்து பல துறைகளை எடுத்துச் சென்று விட்டனர்.
பொதுப்பணித்துறையை சிலர் பொன் விளையும் பூமியாக கருதுகிறார்கள். பணியில் சேர வரும்போதே வட ஆற்காடு மாவட்டம் வேண்டாம் அது வறட்சியானது, எதுவும் கிடைக்காது. நல்ல 'வளம் கொழிக்கும்' மாவட்டம் வேண்டும் என்கிறார்கள்.
இந்தத் துறையை பொறுத்தவரையில் நான்தான் உச்ச அதிகாரம் படைத்தவன். உங்கள் பிரச்சனை எதுவானாலும் என்னிடம் நேரில் வந்து உண்மையை சொல்லுங்கள். செய்து தருகிறேன். இதற்காக இரண்டு மூன்று அமைச்சர்கள் சிபாரிசு, ஐந்தாறு எம்எல்ஏக்கள் சிபாரிசு என்று வர வேண்டாம்.
முல்லை பெரியாறு அணை பலமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. ஆனால், கேரள அரசு இதை மாற்றி சொல்லி வருகிறது. அரசியல் பரபரப்புக்காக அந்த அணை பாதுகாப்பு இல்லை என கூறி வருகிறது.
மத்திய அரசின் நீர்வளத் துறையின் நிபுணர் குழு கேரள அதிகாரிகள் முன்னிலையில் இந்த அணையை பரிசோதித்து பார்த்து அணை வலுவாக இருப்பதாக கூறியுள்ளது. ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாமல் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. தற்போது இந்த அணை கேரள அரசுக்குத்தான் சொந்தம் என்கிற வகையில் சட்டம் போட்டிருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்குவதற்காக அவர்கள் போட்ட சட்டம் செல்லாது என அதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பரம்பிக்குளம்- ஆழியாறு பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கேரள அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். அதற்கு தமிழக அரசும் தயாராக உள்ளது.
மேட்டூர் அணையில் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லாததால் வழக்கம்போல ஜூன் 12ம் தேதி அணையை திறக்க வாய்ப்பு இல்லை. மழை பெய்து போதுமான அளவிற்கு தண்ணீர் வந்ததும் அணை திறக்கப்படும்.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் நமக்கு சில சந்தேகங்கள் இருந்ததால் விளக்கம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு சில மாநிலங்கள் சென்றுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்காக காவிரி நடுவர் மன்றம் காத்திருக்கிறது என்றார் துரைமுருகன்.