ஜெயின் கோவில் கொலை-கொள்ளை: மேலும் மூவர் கைது
சென்னை: சென்னை ஜெயின் கோவலில் பூசாரியை கொலை செய்துவிட்டு ரூ. 3 கோடி பெறுமான நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் போலீசார் மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இதோடு கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அவர்களிடம் இருந்து போலீசார் இதுவரை 9 கிலோ நகைகளை மீட்டுள்ளனர்.
சென்னை செளகார்பேட்டை தங்கசாலை தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் சமீபத்தில் கொள்ளையர்கள் சிலர் புகுந்து தலைமை பூசாரி இம்மத்மால் என்பவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த ரூ. 3 கோடி பெறுமானமுள்ள 22 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் போலீசார் இது தொடர்பாக ராம்பகதூர் (30), அவரது மனைவி சீதா தேவி (25), விஜய் சிங் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கிலோ எடை கொண்ட தங்க அங்கியை மீட்டனர்.
இந்நிலையில் இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,
ஜெயின் கோவிலை 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துள்ளது. இதில் 10 பேர் கோவிலுக்குள் சென்று கொள்ளையடித்துள்ளனர். ஒருவர் வெளியில் கொள்ளைக்கு காவல் இருந்துள்ளார்.
கோவிலில் ஏற்கனவே காவலாளியாக பணியாற்றிய பகதூர் சிங் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் நேபாளம் சென்று விட்டார். போகும் போது பிரேம் சிங் என்பவரை புதிய காவலாளியாக சிபாரிசு செய்து பணியில் அமர்த்தி விட்டு சென்றிருக்கிறார்.
ஜெயின் கோவிலில் ஏராளமான தங்க நகைகள் பாதுகாப்பற்ற நிலையில் பீரோக்களில் வைத்திருப்பதை அறிந்த பகதூர் சிங் அவற்றை கொள்ளையடிக்க நேபாளத்தில் வைத்து திட்டம் திட்டியுள்ளார். இதற்கு காவலாளி பிரேம் சிங்கும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சூரஜ் பகதூர் கோலி (24), உறவினர் ரமேஷ் (20), அமர் (28) ஆகிய மூன்று பேரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதுவரை 9.225 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 1.2 கோடியாகும். மீதமுள்ள 13 கிலோ நகைகளையும் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்.
மூன்று பிரிவுகளாக செயல்பட்ட கொள்ள கும்பலில் ஒரு பிரிவை பிடித்துவிட்டோம். மற்ற இரண்டு பிரிவை சேர்ந்த ஷோபன், காமி, ஷோபன் டம்டு, ஜெகத் சிங், காலிபன், ராம் பகதூர், அக்கி ஆகியோரை தேடி வருகிறோம்.
கொலை, கொள்ளை நடந்த அன்று இரவு காவலாளி பிரேம் சிங்கின் அறையில் கொள்ளையர்கள் தங்கி ஆலோசனை நடத்தி நள்ளிரவு 1 மணியளவில் கொலையை செய்து விட்டு, கொள்ளையும் அடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காவலாளி பிரேம்சிங் மீது ஏற்கனவே மும்பையில் கொள்ளை வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது என்றார் ராஜேந்திரன்.