பாதுகாப்பு பணியில்: திணறும் சென்னை விமான நிலையம்
சமீபத்தில் கைது செய்து செய்யப்பட்ட தீவிரவாதி மாத்னி தான் சென்னையில் இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்ததாக கூறியுள்ளான். மேலும், தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கு நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. ஆள்பற்றாக்குறை காரணமாக விமான நிலையத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாமல் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையின சிஐஎஸ்எப் திணறி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் 1,000 வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது 600 பேர் மட்டுமே வேலை பார்க்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக பணி சேர்க்கை எதுவும் நடைபெறவில்லை. இதனால் தற்போது இருக்கும் வீரர்களை வைத்து அப்படி இப்படி என சமாளித்து வருகிறது.
மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்களை பாதுகாக்கும் பணியில் இருக்கும் இந்த குறைபாடு உடனடியாக களைய வேண்டும் என்றும், சென்னைக்கு கூடுதலாக 600 பாதுகாப்பு வீரர்கள் தேவை என்றும் சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஐஎஸ்எப் படைபிரிவு வீரர் ஒருவர் கூறுகையில், ஆள்பற்றாக்குறை காரணமாக ஒரு நாளைக்கு நாங்கள் தொடர்ந்து 12 மணி நேரம் வேலை பார்க்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கேட்டல், நாம் துணை ராணுவத்தை சேர்ந்தவர்கள் இப்படி தான் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறுகின்றனர்.
ராணுவத்தில் இருப்பவர்கள் கூட எங்களை மாதிரி வேலைபார்க்க மாட்டார்கள். அவசர காலம், போர்க் காலம் போன்ற சமயங்களில் தான் அவர்களுக்கு நாங்கள் தற்போது பார்ப்பது போல் கடுமையான வேலைகள் இருக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக இது நடந்து வருகிறது என்றார்.
சிஐஎஸ்எப் படைபிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், வீரர்கள் 12 மணி நேரம் உழைப்பதால் சோர்ந்து விடுகின்றனர். வீரர்கள் சில சமயங்களில் அதிக வேலைபளூ காரணமாக பயணிகளிடம் கடினமாக நடந்து கொள்கின்றனர்.
அவர்களுடன் நட்பு உறவுடன் நடந்து கொள்ள தவறிவிடுகின்றனர். வேலை நேரத்தை குறைக்காத வரையில் இதை அவர்களால் தவிர்க்க முடியாது.
மனிதவளத்தை பொருத்தவரை சென்னை விமான நிலையம் நாட்டிலே மோசமானதாக இருக்கிறது. ஆள்பற்றாக்குறை வெகுவாக பாதித்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக இது தொடர்வது கொடுமையானது.
இதனால் பாதுகாப்பு சோதனை செய்யும் இடங்களின் எண்ணி்க்கையை குறைக்க வேண்டியுள்ளது. விமான நிலையத்தை கண்காணித்தால் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை எளிதாக கண்டறிய முடியும்.
தற்போது சென்னை விமான நிலையம் மேலும் விரிவாக்கப்பட்டு வருகிறது. நாங்கள் தற்போது மீண்டும் ஒரு சர்வே செய்துள்ளோம். அதன்படி சென்னைக்கு மொத்தம் 1200 பாதுகாப்பு வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.
தற்போது 600 பேர் தான் இருப்பதால் மீதம் தேவைப்படும் 600 பேரை விரைவில் நியமிக்க வேண்டும் என கேட்டுள்ளோம். ஆனால், இந்தக் கோரிக்கை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருகிறது என்றார்.