தீவிரவாத அச்சுறுத்தல்-சென்னையை கண்காணிக்க கேமராக்கள்!
இதன் மூலம் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
சமீபத்தில் தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதாக ஐபி எச்சரித்தது. இதை உறுதி செய்வது போல டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி மத்னியும், சென்னையில் படித்த வேலையில்லாத இளைஞர்களைத் தேர்வு செய்து தீவிரவாத பயிற்சி அளிக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
சென்னை முழுவதும் 75 இடங்களில் ஸ்பை கேம் எனப்படும் ரகசிய கண்காணி்பு காமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்து கண்டுபிடிக்க முடியும்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாகவே தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக எஙகளுக்கு அவ்வப்போது தகவல்கள் வருகின்றன. இதையடுத்து ரகசியக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த கேமராக்கள் அனைத்தும் வணிக வளாகங்கள், ரயில்வே நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், ரோந்து வாகனங்கள், முக்கிய சாலைகள் உள்ளிட்ட இடங்களில் நிறுவப்படவுள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தார் கூறுகையில், தற்போது 35 கண்காணிப்பு கேமராக்கள் நகரில் உள்ளன. இவை போக்குவரத்து விதி மீறலைக் கண்காணிக்க நிறுவப்பட்டவையாகும். தற்போது இவை பாதுகாப்பு கண்காணிப்புக்கும் பயன்படுத்தப்படும் என்றார்.
இன்னும் சில வாரங்களில் சென்னை அருகே என்.எஸ்.ஜி,. முகாம் அமையவுள்ளது. இதன் மூலம் சென்னை நகரின் பாதுகாப்பு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.