எதிர்கட்சிகள் பேச்சை காது கொடுத்து கேளுங்கள்-அதிமுக
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியின்ர எதிர்கட்சிகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும் என அதிமுக எம்.பி செம்மலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவி்க்கும் தீர்மானத்தின் போது சேலம் அதிமுக எம்.பி. செம்மலை பேசுகையில்,
பேரறிஞர் அண்ணா சொன்னதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 'நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அதனை கேட்க ஆளுங்கட்சியினர் தங்கள் காதுகளை திறந்து வைத்திருக்க வேண்டும்' என்றார் அண்ணா.
இதற்கு பொருள் என்னவென்றால் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப உரிய முறையில் ஆளுங்கட்சியினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான்.
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா சர்வதேச, தேசிய, மாநில மற்றும் உள்ளூர் பிரச்சனைகளில் ஆழமான அறிவும், அனுபவமும் கொண்டவர். எனவே பல்வேறு முக்கிய தேசிய பிரச்சனைகளில் அவரது கருத்துக்களை கேட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெயலலிதா கூறியுள்ளபடி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்த வேண்டும். அத்துடன் இத்திட்டத்தில் பணிபுரியும் ஆண் அல்லது பெண் ஊழியருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 100 ஊதியம் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றார் செம்மலை.