தமிழ்ச்செல்வன் குடும்பம் யு.கே. செல்ல விருப்பம்!
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாமில் தங்கியுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் விரைவில் விடுதலையாகி, இங்கிலாந்து செல்ல விரும்புவதாக இலங்கை பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாமில், அகதிகளோடு அகதிகளாக தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் தங்கியுள்ளனர்.
இதுகுறித்து சேனாரத்ன கூறுகையில், வவுனியா இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள அகதி மக்களை நான் கடந்த வாரம் நேரில் சென்று, மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்தேன்.
அங்கு தங்கியிருந்து பணியாற்றும் மருத்துவர்களுடன் பேசினேன். தாங்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வழங்கி வரும் சேவை குறித்து விளக்கினர்.
அங்குள்ள டாக்டர்களுக்கு முறையான தங்கும் வசதி இல்லை. அதுதொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சில முகாம்களில் கழிப்பறை வசதி இல்லை, தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாமலும் உள்ளன. அவற்றைத் தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வவுனியா பயணத்தின்போது தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து உரையாடினேன். தமிழ்ச் செல்வனின் மகள் 5 ஆம் வகுப்பிலும் மகன் முதலாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
தமிழ்ச்செல்வனின் மனைவி தாங்கள் விரைவில் விடுதலையாகி இங்கிலாந்துக்கு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.
இருப்பினும் இதுகுறித்து சட்டப்படி என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை என்றார் அவர்.