மாநிலங்களுக்கு சுயாட்சி-தமிழகம் வலியுறுத்தல்
சென்னை: மாநிலங்களுக்கு அதிக அதிகாரமும், சுயாட்சியும் தர வேண்டும் என்று மத்திய அரசிடம் அளிக்க தமிழக அரசின் வல்லுனர் குழு தயாரித்துள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் உறவு குறித்து மறு ஆய்வு செய்ய கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன்மோகன் பூஞ்சி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தியது.
மத்திய, மாநில உறவுகளில் எவ்வித மாற்றங்களை செய்யலாம், எப்படி அதனை சீரமைக்கலாம், தற்போதுள்ள சிக்கல்கள் என்ன, அவற்றை எப்படி சரி செய்வது என்பன உள்ளிட்ட 84 கேள்விகளை மாநில அரசுகளுக்கு அந்த குழு அனுப்பியது.
இதற்கான பதில்களை தயார் செய்ய தமிழக அரசு வல்லுனர் குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கையை இன்று முதல்வர் கருணாநிதியிடம் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரான நாகநாதன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய, மாநில நிர்வாக அணுகுமுறை, சட்டமன்றம், நீதித்துறை நடைமுறை உள்பட, பல்வேறு அம்சங்கள் அடங்கிய 84 கேள்விகளுக்கு பதிலளிக்க வல்லுனர் குழு அவசியம் என்பதால் எனது தலைமையில் பொதுத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், வழக்கறிஞர் விடுதலை உள்பட 8 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் நியமித்தார்.
நாங்கள் பல்வேறு கூட்டங்களை நடத்தி, தமிழகத்துக்கு தேவையான அதிகாரங்களை பெறும் நோக்கத்தோடு அந்த 84 கேள்விகளுக்கு பதில்களை தயாரித்தோம்.
மாநில அரசுகள் சார்பாக பதிலளிக்க முடியாத சில கேள்விகளும் அதில் இடம் பெற்றிருந்தன.
தமிழகத்தில் மாநில சுயாட்சி கேட்டு 1969ம் ஆண்டு ராஜமன்னார் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு ஒரு பரிந்துரையையும் அளித்தது. அதன் அடிப்படையில் 1974ல் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம் எழுந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் மாநில கட்சிகள் இடம் பெற்றுள்ள மத்திய அரசுதான் நடைபெற்றுள்ளது. அரசியல்ரீதியாக மத்தியில் கூட்டாட்சி வந்துவிட்ட போதிலும், அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி தத்துவம் இன்னமும் இடம்பெறவில்லை.
இந் நிலையில் நாங்கள் இந்த அறிக்கையில் அளித்துள்ள பதில்களின் அடிப்படையில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வழங்கும் வகையில் அரசியல் சட்ட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளோம்.
நீதிபதி பூஞ்சி அறிக்கையில் எழுப்பியுள்ள 84 கேள்விகளுக்கு உரிய பதில்களும், ராஜமன்னார் குழுவின் அறிக்கையும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதற்கான முக்கிய கூறுகளையும் மாநில சுயாட்சி தீர்மானத்தையும் இணைத்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளோம்.
இது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வகை செய்யும் என்றார்.