ஏமனில் மூழ்கிய இந்திய கப்பல்-ஊழியர்கள் மீட்பு
சென்னை: ஏமன் நாட்டு கடற்பகுதியில் சுமார் 13 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கியது. அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து கடந்த 6ம் தேதி ஏமனுக்கு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. கப்பலில் 13 இந்திய ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் கப்பல் ஏமனுக்கு சொந்தமான சகோட்ரா தீவில் இருந்து சுமார் 70 கடல் மைல் தொலைவில் வந்த போது கடலில் மூழ்க துவங்கியது.
அந்த கப்பலில் 450 டன் சரக்குகளும், 12 கார்களும் இருந்தன. கப்பல் மூழ்குவதை கண்ட ஊழியர்கள் ஏமன் துறைமுகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மற்றொரு படகில் வந்து 13 ஊழியர்களையும் பத்திரமாக அழைத்து சென்றதாக சகோட்ரா தீவின் இயக்குனர் சையத் சல்மீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் தொழில் செய்யும் இரண்டு ஏமன் வியாபாரிகளுக்காக அந்த சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. மேலும் அந்த கப்பல் கவிழ்வதற்கு மோசமான வானிலை தான் காரணம் என கூறப்படுகிறது. கடற்கொள்ளையருக்கு இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.