For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5வது கட்டமாக டிவிக்கள் வழங்க ரூ.500 கோடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலவச டிவிக்கள் வழங்கும் பணி 4வது கட்டத்தோடு முடியாவிட்டால், 5வது கட்டமாக மேலும் டிவிக்கள் வாங்கி வழங்குவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நிறுத்தப்பட்ட 4வது கட்டமாக இலவச கலர் டி.விக்கள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இத் திட்டத்தின் கீழ் 2,000 குடும்பத்தினருக்கு இலவச கலர் டி.விக்களை ஸ்டாலின் வழங்கிப் பேசுகையில்,

முதல்வர் கருணாநிதி அறிவித்த எல்லா திட்டங்களும் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இலவச டி.விக்கள் வழங்கும் திட்டம் மட்டும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இது பற்றி இங்கே பேசிய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஒன்றைக் குறிப்பிட்டார். திருமண வீட்டிற்கு சென்றால் எல்லோரும் ஒரே நேரத்தில் பந்தியில் அமர்ந்து சாப்பிட முடியாது. ஆட்களை பொறுத்து 2,3 பந்திகள் நடைபெறும். அதே போல தான் டி.வி வழங்குவதும்.

இதற்கு நிதி பற்றாக்குறை காரணம் இல்லை. ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான டி.விக்களை தயாரிப்பது, வாங்குவது, வழங்குவது என்பது இயலாத காரியம். ஒரே நேரத்தில் அனைவருக்கும் டி.வி வழங்குவது தான் முதல்வரின் விருப்பம். அதே நேரத்தில் தரமான டி.விக்களை அனைவருக்கும் வழங்க வேண்டும், எந்தவித முறைகேடும் நடந்து விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

தற்போது 4வது கட்டமாக டி.விக்களை கொள்முதல் செய்து வழங்கி வருகிறோம்.

நான் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தபோது திரண்டிருந்த மக்கள், என் காருக்கு அருகே வந்து பேச முடியாததால் தூர நின்றபடியே எங்களுக்கு டி.வி தாருங்கள் என்று சைகை மூலம் காட்டினர்.

எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் அவர்கள் கேட்கவில்லை. நம்பிக்கை இருப்பதால் தான், நாங்கள் சொன்னால் செய்வோம் என்று அவர்கள் நம்பியதால் தான் அவர்கள் கேட்டனர்.

முதல் இரண்டு கட்ட டி.வி கொள்முதல் செய்தபிறகு அந்த கம்பெனிகளிடம் முதல்வர் பேசி இன்னும் விலையை குறைத்துக்கொள்ள கூடாதா என்று கூறி, டி.விக்கு என்று ஒதுக்கீடு செய்த பணத்தில் ரூ. 163 கோடியை மிச்சப்படுத்தினார்.

அந்த நேரத்தில் 3வது கட்டமாக வழங்குவதற்கு 30 லட்சம் டி.விக்களை ஆர்டர் செய்திருந்தோம். இந்த மிச்சப் பணத்தால் கூடுதலாக 7.5 லட்சம் டி.விக்களை ஆர்டர் செய்தோம்.

4வது கட்டமாக 41,62,500 பேருக்கு டி.வி வழங்கப்படும். இடையில் தேர்தல் வந்ததால் இந்தப் பணியை தொடர முடியவில்லை. தற்போது தேர்தல் முடிந்து விட்டது எங்கள் பணியை தொடங்கி விட்டோம். ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் நாங்கள் கலர் டி.விக்களை வழங்கி விடுவோம்.

ஒருவேளை 4 கட்டத்தோடு அனைவருக்கும் டி.வி வழங்க முடியவில்லையென்றால் 5வது கட்டமாகவும் டி.விக்களை வழங்க முதல்வர் கருணாநிதி ரூ.500 கோடியை ஒதுக்கித் தந்திருக்கிறார். ஆக டி.வி கிடைக்காது என்று யாரும் அச்சப்பட வேண்டாம்.

நீங்கள் பயப்படுகிற ஆட்சி இங்கே நடக்கவில்லை. நீங்கள் நம்புகிற, நீங்கள் சொல்வதைக் கேட்கிற ஆட்சி தான் நடக்கிறது என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X