வட்டி குறைப்பு-முகர்ஜி அட்வைஸ்
டெல்லி: தொழில்துறை நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவும் சீராகவும் அமைய இந்திய வங்கிகள் மேலும் வட்டியைக் குறைத்து கடன்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளையும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று டெல்லியில் அனைத்து வங்கிகளின் சேர்மன்கள் மற்றும் உயர் நிர்வாகிகளையும் பிரணாப் முகர்ஜி சந்தித்தார் (இந்தக் கூட்டம் குறித்து சில தினங்களுக்கு முன் தட்ஸ்தமிழ் சிறப்புக் கட்டுரை வெளியிட்டது நினைவிருக்கலாம்). இதில் பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஓபி பட், பஞ்சாப் நேஷனல் வங்கி சேர்மன் கேசி சக்ரபர்த்தி, ஐஐஎப்சிஎல் தலைவர் எஸ்எஸ் கோஹ்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி தெரிவித்ததாவது:
நாட்டின் நிதித்துறையில் மக்களுடனும் தொழில் நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்பில் இருப்பவை வங்கிகளே. இவை தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசின் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகத் திகழ வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு வகை வட்டி வீதங்களை கணிசமாகக் குறைத்துள்ளது. இதன் பலன்களை மக்களுக்கு நேரடியாக வழங்குவதில் முட்டுக்கட்டையாய் நிற்பவை வங்கிகளே.
இனி வங்கிகள் என்ன செய்யுமோ தெரியாது... மக்களுக்கும் தொழில் துறைக்கும் எளிய வழிகளில், குறைந்த வட்டியில் கடன்கள் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நிர்ணயித்துள்ள பொருளாதார இலக்கை சுலபத்தில் எட்ட முடியும்..., என்றார்.