சத்யம்: ரூ.10000 கோடி நஷ்ட ஈடு கேட்டு க்யூவில் நிற்கும் நிறுவனங்கள்!
டெல்லி: சத்யம் நிறுவனம் தொடர்புடைய பல்வேறு வழக்குகளில் இதுவரை ரூ.10000 கோடிக்கு நஷ்ட ஈடு கேட்டு நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
வழக்குத் தொடர்ந்துள்ளவற்றில் பல நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. 37 நிறுவனங்களோ, யார் என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது சத்யம் புதிய நிர்வாகம்.
இவற்றைத் தவிர, பிரிட்டன் நிறுவனம் ஒன்று 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மோசடியை ஒப்புக் கொண்ட பிறகு, அமெரிக்காவில் தொடரப்பட்ட இரு நஷ்ட ஈடு வழக்குகளும் இன்னும் முடிந்தபாடில்லை.
சத்யம் நிறுவனத்தின் நிர்வாகத்தை அரசு ஏற்றதும், அமெரிக்காவில் மட்டுமே 12க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. போலி முதலீட்டாளர்கள், போலி முதலீடுகளைக் காட்டி தங்களை சத்யம் ஏமாற்றிவிட்டதாக அவர்கள் இந்த வழக்கினைத் தொடர்ந்துள்ளனர்.
இப்படி தொடரப்பட்டுள்ள வழக்குகளில் சத்யத்துக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் குறைந்தபட்சம் ரூ.10000 கோடி வரை நஷ்ட ஈடாகவே தரவேண்டியிருக்கும் சத்யம்.
ஆனால் தற்போது நடக்கிற வழக்குகளைத் தவிர்த்து, அடையாளம் தெரியாத நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள வக்கீல் நோட்டீஸ்களுக்கு தாங்கள் பதில் சொல்லப் போவதில்லை என சத்யம் நிர்வாகம் அறிவித்துள்ளது. புலனாய்வு விசாரணைகள் முடிந்த பிறகே இதுகுறித்து மேல் விபரங்கள் சொல்ல முடியும் என்றும் சத்யம் அறிவித்துள்ளது.