வவுனியா, செட்டிக்குளம் முகாம்களில் 22 முதியோர் பலி
வன்னி: சத்தான உணவு, ஆரோக்கியமான குடிநீர், சுத்தமான சுகாதாரம், மருத்துவ வசதி உள்ளிட்டவை இல்லாமல் வவுனியா, செட்டிக்குளம் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 22 முதியவர்கள் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
இடம் பெயர்ந்த தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் மகா மோசமான நிலை நிலவுகிறது. அங்குள்ள மக்களுக்கு சரியான சாப்பாடு கூட இல்லாத அவல நிலை காணப்படுகிறது.
உரிய மருத்துவ வசதிகளோ, குடிநீர், கழிப்பறை வசதிகளோ கிடையாது. ஆடு, மாடுகளை அடைப்பது போல அங்கு தமிழர்களை அடைத்து வைத்துள்ளனர்.
இதனால் இந்த முகாம்களில் பலர் உயிரிழக்கும் அபாயம் எழுந்துள்ளது. இந்தந நிலையில், வவுனியா, செட்டிக்குளம் முகாம்களில் தங்கியிருந்த 22 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 14 பேரும், திங்கள்கிழமை 8 பேரும் இறந்துள்ளனர்.
இறந்த அனைவருமே 70 வயதைத் தாண்டியவர்கள். இவர்கள் இயற்கையாக மரணமடைந்துள்ளார்கள் என்று கூறியபோதிலும் கூட செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட காரணங்கள்தான் இந்த வயோதிகர்களை அநியாயமாக கொன்றுள்ளது.
வயதானவர்களை முகாம்களிலிருந்து அனுப்பும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளபோதிலும் கூட அது சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.