கனடா எம்.பி கொழும்பில் தடுத்து நிறுத்தம்-நாடு கடத்தல்
கனடா நாடாளுமன்றத்தின் லிபரல் கட்சியைச் சேர்ந்த எம்.பி. பாப் ரே. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவத்தின் மிருகத் தாக்குதலை கடுமையாக சாடி வந்தவர் பாப்.
இந்த நிலையில் இன்று அவர் கொழும்புக்கு வந்தார். பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை அதிகாரிகள் அங்கேயே தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து குடியேற்றத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாப் ரே ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எனவே அவரை நாட்டுக்குள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் நாடு கடத்தப்படுவார் என்றார்.
கனடாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக சமீப மாதங்களில் பெரும் போராட்டங்களை நடத்தினர். டோரன்டோவில் பிரமாண்ட பேரணியையும் அவர்கள் நடத்தினர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் உள்ள கனடா நாட்டுத் தூதரகத்தை தாக்கினர். இதற்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கனடா நாட்டு எம்.பி.யை இலங்கை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.