சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-ஸ்டாலின் துவக்கி வைத்தார்
துணை முதல்வர் ஸ்டாலின் இத் திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டம் 2014ம் ஆண்டில் முடிவடைந்து ரயில் ஓடத் துவங்கும்.
கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக அமைச்சரவை இந்த தி்ட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.
இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.14,600 கோடி. இதில் 41 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கும். மீதத் தொகையை ஜப்பான் அரசு கடனாக வழங்குகிறது.
சுமார் 45.1 கிமீ நீளம் கொண்ட இந்த திட்டத்தில் 24 கிமீ ரயில் பாதை தரைக்கு அடியில் சுரங்கப் பாதையாக அமைக்கப்படும். மிச்சமுள்ள 21 கி.மீ. பாதை பறக்கும் ரயில் பாதையாக பாலத்தில் அமையும்.
இத் திட்டத்தின் கீழ் இரண்டு வழித்தடங்கள் உருவாக்கப்படும். சுமார் 23.1 கிமீ நீளம் கொண்ட முதல் வழித்தடம் வண்ணாரபேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக சென்னை விமான நிலையம் வரை செல்லும்.
இதில் வண்ணாரபேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை சுரங்கப் பாதையில் ரயில் செல்லும்.
22 கிமீ தூரம் கொண்ட இரண்டாவது வழித்தடம் சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை செல்கிறது. இதில் சென்ட்ரலில் இருந்து அண்ணாநகர் வரை சுரங்க பாதையில் ரயில் இயங்கும்.
முதல்வர் கருணாநிதியின் நேரடி கண்காணிப்பில் கீழ் இயங்கி வந்த இத்திட்டம் தற்போது துணை முதல்வர் ஸ்டாலின் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.
இத்திட்டத்தில் முதல் கட்டமாக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அசோக் நகர் வரை 4.5 கிமீ தூர வழித்தடம் ரூ.199.20 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் ஹைதராபாத்தை சேர்ந்த சோமா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான தூண்கள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. துணை முதல்வர் ஸ்டாலின் பச்சை கொடி காட்டி சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை துவங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளப்பதற்காக முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையின் படி மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து அசோக் நகர் வரை ரயில்பாதை அமைக்கும் பணி துவக்கப்ப்டடுள்ளது.
இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 2014-15ல் மெட்ரோ ரயில் சென்னையில் ஓடும் என்றார்.
இந்தத் திட்டத்துக்கான அறிக்கை 1.11.2007ல் சமர்பிக்கப்பட்டது. 7.11.2007ல் தமிழக அமைச்சரவை திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்த பணிகளை நிர்வகிக்க மெட்ரோ ரெயில் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்பட்டு, இது இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் ஜப்பான் அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பரில் டோக்கியோ நகரில் கையெழுத்தானது. மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது நினைவுகூறத்தக்கது.
மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திமுக தமிழகத்துக்குக் கொண்டு வந்துள்ள மிக முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்று.