சென்னையில் கடல் அரிப்பு மூழ்கும் சர்ச்!
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பு மற்றும் கடல் சீற்றம் காரணமாக அங்குள்ள சீனிவாசபுரத்தில் கட்டப்பட்ட ஒரு சர்ச் கடலில் மூழ்கி விடும் அபாய நிலையில் உள்ளது.
சீனிவாசபுரத்தில் கடலோரம் இயேசு கிறிஸ்து சர்ச் என்ற தேவாலயம் உள்ளது. அங்குள்ள மீனவ மக்கள் இதைக் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக கடல் நீர் உள்ளே புகுந்து, மண் அரிப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் சர்ச் பாதி அளவுக்கு சாய்ந்து விட்டது.
படிப்படியாக அது கடலில் மூழ்கும் நிலைக்குப் போய்க் கொண்டுள்ளது.
இந்த சர்ச் கடந்த 14 வருடங்களாக இங்கு இருந்து வருகிறது. இங்கு சர்ச் கட்டப்பட்டபோது கடல் 1000 அடி தூரத்திற்கு இருந்ததாம். ஆனால் கடந்த ஒரு மாதமாக கடல் நீர் சர்ச்சைத் தாண்டி வந்து விட்டதாம்.
சர்ச் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வேறு இடத்திற்கு சர்ச்சை மாற்ற வேண்டும், இல்லாவிட்டால் இது கடலில் மூழ்கி விடும் என இந்த சர்ச்சின் பாதிரியாரான ஜெரால்டு கூறினார்.
இந்த சர்ச் தவிர அக்கம் பக்கத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவையும் கூட கடல் மண் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.