ஏர்பஸ் ஓட்டுவதைத் தவிர்ப்போம்: விமானிகள்
இதுகுறித்து ஏர்பிரான்ஸ் நிறுவன விமானிகள் சங்கம் கூறுகையில், ஏர் பஸ் நிறுவனம் தனது பயணிகள் விமானங்களில், வேகத்தைக் காட்டும் கருவிகளில் மாற்றம் செய்ய வேண்டும். அதுவரை ஏர்பஸ் விமானங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாற்றங்கள் செய்யப்படும் வரை ஏர்பஸ் விமானங்களை விமானிகள் ஓட்டக் கூடாது.
மாற்றங்கள் செய்யப்படும் வரை ஏ330, ஏ340 விமானங்களை ஓட்டுமாறு கூறினால் மறுத்து விடுங்கள் என்று கூறியுள்ளது.
ஏ330 ரக விமானம் கடந்த வாரம் ரியோ நகரிலிருந்து பாரீஸ் கிளம்பியபோது அட்லான்டிக் கடலில் மாயமாகி விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தின் வேகத்தை காட்டும் கருவியில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.
வேகத்தைக் காட்டும் கருவி தவறாக செயல்பட்டு, தவறான வேகத்தை விமானிகளுக்குக் காட்டியதால் அவர்கள் குழம்பிப் போய் ஏற்கனவே வேகமாக போய்க் கொண்டிருந்த விமானத்தை மேலும் வேகமாக ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே இந்த முடிவை ஏர்பிரான்ஸ் விமானிகள் சங்கம் எடுத்துள்ளது.
இந்த அழைப்பை ஏர்பிரான்ஸ் விமானிகள் அனைவரும் ஏற்பார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அப்படி செய்தால் ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.