விடுதலைப் புலிகளுக்கு ஆயுத சப்ளை - அமெரிக்காவில் நான்கு தமிழர்கள் கைது
நியூயார்க்: விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் சப்ளை செய்ததாக கூறி நான்கு தமிழ் அமெரிக்கர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பெயர்கள் - கருணா என்கிற கருணாகரன் கந்தசாமி, ராஜ பார்த்தீபன் என்கிற பார்த்தீபன் தவராசா (தம்பி சாம்ப்ராஸ், ஸ்டீபன் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு), டாக்டர் மூர்த்தி, விநாயகமூர்த்தி முருகேசு என்ற பெயர்களில் அழைக்கப்படுகிற முருகேசு விநாயகமூர்த்தி மற்றும் சந்துரு என்கிற விஜயசந்தர் பத்மநாதன்.
இவர்களில் கந்தசாமி, விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்க கிளையின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தமிழர் புனரமைப்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் விடுதலைப் புலிகள் பணம் திரட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வக்கீல் பென்டன் கேம்ப்பல் கூறுகையில், இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்ட சில வாரங்களில் அமெரிக்காவில் செயல்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை நாங்கள் நீதியின் முன் நிறுத்தியுள்ளோம்.
பல கோடி பணத்தைத் திரட்டி அதைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்களை வாங்கி அனுப்ப இவர்கள் உதவியுள்ளனர் என்றார்.
ஐக்கிய மாவட்ட தலைமை நீதிபதி ரேமான்ட் டீரி முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இதில் நான்கு பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து இவர்களுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும்.
அதிகபட்சமாக 20 ஆண்டு தண்டனை இவர்களுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.