வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைகிறது-சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் வரலாம்
கடலூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் நிலைகளில் ஒன்றான வீராணம் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சென்னை நகரில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மாநகருக்கான குடிநீர் சுற்றுப்புறங்களில் உள்ள புழல், செங்குன்றம், பூண்டி ஏரிகளிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வீராணம் ஏரியிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரும் மிகப் பெரிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
வீராணம் ஏரித் தண்ணீர் வர ஆரம்பித்தவுடன்தான் சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சினை பெருமளவில் தீர்ந்தது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ளது வீராணம் ஏரி. அங்கிருந்து சென்னை மக்களின் தாகம் தீர்த்து வந்த வீராணம் ஏரி தற்போது வறளத் தொடங்கியுள்ளது.
மிகப் பெரிய ஏரியான வீராணத்தின் மொத்த கொள்ளளவு 47.5 அடியாகும். மழைக் காலங்களில் அருகில் உள்ள ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளிலிருந்து வரும் தண்ணீர் வீராணத்திற்கு வந்து சேரும்.
இந்த ஏரியில் தற்போது 38.4 அடி தண்ணீரே உள்ளது.
இதையடுத்து மே 26ம் தேதி முதல் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது.
இதையடுத்து பண்ருட்டி, விழுப்புரம், வடவாறு ஆகிய பகுதிகளி்ல ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஆழ் குழாய்க் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து அதை சென்னைக்கு அனுப்பி வருகிறார்கள்.
ஏற்கனவே புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லை. இப்போது வீராணமும் கை விட்டு விட்டதால் சென்னை நகரில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.