செங்கோட்டை அருகே வாலிபர் வெட்டி கொலை
செங்கோட்டை: செங்கோட்டை அருகே வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் மூன்று பேரை தேடி வருகின்றனர்.
செங்கோட்டை அருகேயுள்ள கண்ணுபுளிமெட்டு பகுதியில் வசித்து வருபவர் மச்சத் தேவர் மகன் முருகன். இவர் இப்பகுதியில் உள்ள குண்டாறு நீர்த்தேக்கத்தில் படகு போக்குவரத்து குத்தகைக்கு எடுத்திருந்தார்.
இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த இசக்கிதுரை மகனும் புதூர் பேருராட்சி முன்னாள் துணை தலைவருமான சீனித்துரை, அவரது தம்பி ராஜா ஆகியோருக்கும் இடையே நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து செங்கோட்டை போலீசில் இரண்டு நாட்களுக்கு முன் இருதரப்பு குறித்தும் விசாரணை நடந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் முருகன் கண்ணுபுளி மெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சீனித்துரை, ராஜா, நடுவங்குறிச்சியை சேர்ந்த ராஜா ஆகிய மூன்று பேரும் முருகனை வழிமறித்து முகம், இடுப்பு, கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் கொடிய ஆயுதங்களால் வெட்டியுள்ளனர்.
இதில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காகி டிஎஸ்பி மயில்வாகணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகொலை செய்யப்பட்ட முருகனுக்கு சோபா என்ற 7 மாத கர்ப்பிணி மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளது. தப்பி ஓடிய கொலையாளிகள் மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை அடு்தது அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.