மயங்கிக் கிடந்தவரை தாண்டிச் சென்ற அரசியல்வாதிகள்!
இந்தப் புகைப்படம் காட்டும் காட்சிக்குரிய பின்னணியைக் கேட்டால் ரத்தம் கொதிக்கும், இதயம் வெடிக்கும்.
இடம் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்.
காட்சிக்கான பின்னணி - ஓரத்தில் படுத்துக் கிடக்கிறாரே அந்த முதியவர். அவர் ஓய்வாக படுத்திருக்கவில்லை. வெயில் கொடுமையால் வந்த மயக்கத்தால் வீழ்ந்து கிடக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் வசிக்கும் 68 வயதாகும் அந்த முதியவரின் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விட்டனர்.
தனது நிலத்தை மீட்டுத் தருமாறு கோரி ஆட்சித் தலைவரிடம் மனு கொடுப்பதற்காக வந்தார். கடும் வெயிலில் வந்ததால், வாசலிலேயே மயங்கி விழுந்து விட்டார்.
நம் மக்களுக்குத்தான் 'மனசாட்சி' நிறைய இருக்கிறதே!, யாரும் அந்தப் பெரியவரை கண்டு கொள்ளவில்லை. அவரவர் வேலையைப் பார்த்து போய்க் கொண்டிருந்தனர்.
அந்தக் காருக்கு முன்பு கும்பலாக நிற்கிறார்களே அவர்கள் வேறு யாருமல்ல, அந்த முதியவரைப் போன்ற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான அப்பாவி வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள்தான்.
கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், பொன்னேரி எம்எல்ஏ பலராமன், அதிமுக எம்பி வேணுகோபால் உள்ளிட்டோர்தான் அவர்கள். ஆட்சியைப் பார்த்துப் பேசி விட்டு தடதடவென அந்தப் பெரியவர் விழுந்து கிடந்ததைத் தாண்டி வந்து தங்களது கார்களுக்குள் புதைய முயற்சிக்கிறார்கள்.
தேர்தல் தான் முடிந்து விட்டதே, 'இதெல்லாம்' தேவை இல்லை என்று இந்த மக்கள் பிரதிநிதிகளும், அவர்களுடன் வந்தவர்களும் நினைத்து விட்டார்களோ என்னவோ.
நாம் மனிதத்தை மறக்கவில்லை, மாறாக, கொன்று குழி தோண்டிப் புதைத்து விட்டோம் என்றே தோன்றுகிறது.